பிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு!
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சிகள் திமுக தலைமையில் நாளை மறுநாள் குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளது.
டெல்லி; குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சிகள் திமுக தலைமையில் நாளை மறுநாள் குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளது.
சிஏஏ சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள்
மிக மோசமாக தடியடி நடத்தி போலீசார் அவர்களை கலைந்து செல்ல வைத்தனர். போலீஸ் தடியடியை கண்டித்து தமிழக முழுக்க தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் திமுகவும் இந்த சட்டத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடி வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, திமுக கையெழுத்து இயக்கம் நடத்தியது.
தமிழகம் முழுக்க மொத்தம் 2 கோடி பேரிடம் திமுக இதன் மூலம் கையெழுத்து வாங்கியது. ஒரே வாரத்தில் 2 கோடி பேரிடம் திமுக இப்படி கையெழுத்து வாங்கியது. இப்படி பெறபட்ட கையெழுத்து படிவங்களை வரும் 19ஆம் தேதி குடியரசு தலைவரிடம் திமுக எம்பிக்கள் வழங்கவுள்ளது.
இந்த கையெழுத்து படிவங்களை திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் மட்டுமின்றி, மொத்தமாக எதிர்கட்சிகளுடன் சென்று குடியரசு தலைவரிடம் அளிக்க உள்ளது. திமுக எம்பி டி ஆர் பாலு தலைமையில் எதிர்க்கட்சிகள் குழு குடியரசுத் தலைவரை சந்திக்கிறது.
சிஏஏவை கைவிடும்படி தமிழக எதிர்க்கட்சிகள் கூட்டணி இதில் கோரிக்கை வைக்க உள்ளது. திமுகவின் இந்த அரசியல் நடவடிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப்டுகிறது.