உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை.. 2011 சென்செஸ் படி தேர்தலை நடத்தலாம்.. உச்ச நீதிமன்றம்!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்படி உள்ளாட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உள்ளாட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.
இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக சார்பாக இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்தனர்.
திமுக தனது மனுவில், பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் அதை செய்யாமல் தேர்தல் நடத்துகிறார்கள். இதனால் அந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். வார்டு வரையறை, இடஒதுக்கீடு பணிகளை முடித்த பின்னர் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலோடு சேர்ந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் சூரிய காந்த், பூஷன் ராமகிருஷ்னன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதில் வாதம் வைத்த திமுக தரப்பு வார்டு வரையறை, இடஒதுக்கீடு பணிகளை முடிக்காமல் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலோடு சேர்ந்து தேர்தல் நடத்த முயற்சி செய்கிறார்கள்.
அதோடு பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வில்லை. தேர்தலை தனி தனியாக நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும். இதனால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்று திமுக வாதம் வைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, திமுக வைக்கும் வாதங்கள் அனைத்தும் பொய். இதை ஏற்க கூடாது. திமுக தேர்தலை சந்திக்க பயந்து கொண்டு இப்படி செயல்படுகிறது என்று கூறியது.
இதையடுத்து திமுக மனு உள்ளிட்ட 10 மனுக்களை ஏற்காத நீதிபதிகள், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று கூறினார்கள். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி உள்ளாட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.