டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங், விசிக எம்.பிக்கள் போராட்டம்
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் சனிக்கிழமையன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வுகள் நேற்று நடைபெற்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 1-ந் தேதி வரை இந்த மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும்.
இதில் பங்கேற்க நாடாளுமன்றத்துக்கு சென்ற திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தும் பதாகைகளையும் எம்.பி.க்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.
பேனரால் ரசிகர்கள் இறந்தால் சினிமாவை தடை செய்வோமா?சூர்யாவின் நீட் அறிக்கை- பாஜக காயத்ரி ரகுராம் பதில்
இந்த போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி. திருச்சி சிவா கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 11 மாணவர்கள் நீட் தேர்வுகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த போதும் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நீட் தேர்வு தகர்த்து வருகிறது என்றார்.