பாஜக - அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்தது வரலாற்றுப் பிழை... கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
டெல்லி: திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் உள்ள காங். மூத்த தலைவர் அகமது படேல் வீட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அமைகிறது. பெரும் இழுபறியை அடுத்து, பாஜக - அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், பாஜக - அதிமுக இடையிலான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடந்து வருகிறது. தமிழக பாஜக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் , அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று மாலை கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்தநிலையில், டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: பாமக காங்கிரசுடன் கூட்டணியில் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் தனது கொள்ளைக்கு எதிரான கூட்டணியில் பாமக சேர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
பாஜக - அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்தது வரலாற்றுப் பிழை என்றும், திமுக - காங்கிரஸ் கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், அதிமுக - பாமக கூட்டணி வருத்தமளிப்பதாகவும், கூட்டணி தொடர்பாக இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.