திமுகவுடன் தொகுதி பங்கீடு... டெல்லியில் தமிழக காங்., கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை
டெல்லி: திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங். மூத்த தலைவர் அகமது படேல் வீட்டில் முதல் கட்ட ஆலோசனை நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். மேலும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நாளை கூடி வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி பற்றி ஆலோசிக்க உள்ளனர்.
நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அமைகிறது.
தி.மு.க. தரப்பில் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோருடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இரு கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே போல், அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. பாஜக தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னைக்கு வந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் வீட்டில் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இருப்பினும், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.