தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு
Recommended Video
டெல்லி: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் உரிய சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்யக்கோரி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக அறிவிக்கை வரும் டிசம்பர் 13ம்தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 18ம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேல்முறையீட்டு மனு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி நேற்று திமுக வழக்கு தொடர்ந்தது.
திமுக சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் விவகாரத்தில் வார்டு மறுசீரமைப்புப் பணிகள், இடஒதுக்கீடு, சுழற்சி நடைமுறை மற்றும் இதர சட்டத் தேவைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதன் பிறகே தேர்தல் நடத்தும் அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று திமுக மீண்டும் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிட்டுள்ளது. திமுக தனது மனுவில் தொகுதி, வார்டு வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதன்பிறகே தேர்தல் அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று திமுக தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை கோரி புதிதாக ஆறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுக்களும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு போன்ற காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.