தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
டெல்லி: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் முறையாக வார்டு மறுவரையறைகள் செய்யப்படவில்லை; சுழற்சி முறை இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில்தான் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை இல்லை என தீர்ப்பளித்தது. தற்போது ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் திமுக மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் மறு வரையறை செய்யவில்லை; சுழற்சி முறையில் இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறி தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுக தொடர்ந்துள்ளது.