கவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்
ரவீந்திரநாத் குமாருக்கு கைகுலுக்கி தயாநிதி மாறன் வாழ்த்து சொன்னார்
Recommended Video
டெல்லி: திமுக ஒரு பக்கம், பாஜக ஒரு பக்கம் என எதிரெதிர் கோஷங்களுக்கு இடையில் பதவியேற்பு விழா நடந்தாலும், யாருமே சரிவர கவனிக்காத ஒரு அருமையான தருணம் ஒருசில வினாடிகள் அவையில் அரங்கேறியது!
நடந்து முடிந்த தேர்தலில் மத்தியில் பாஜக அபார வெற்றி பெற்றது. அதுபோல தமிழகத்தில் திமுக அபார வெற்றி பெற்றது. நாடு முழுவதும், பாஜக கையில் 303 இடங்கள் உள்ளன என்றால், தமிழகத்தில் திமுக கூட்டணியில் 37 இடங்கள் உள்ளன.
அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தின் அனைத்து எம்பிக்களும் நேற்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். நம் மாநில எம்பிக்கள் தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டு பதவியேற்க, அந்த சமயத்தில் பாஜகவினர் எதிர் கோஷங்களை எழுப்பினர். இதனால் நேற்று அவையே பரபரப்பாகி, சூடுபறந்தது.
ரவீந்திரநாத் குமார்
ஆனால் ரவீந்திரநாத் குமார் மட்டும், பதவி பிரமாணம் செய்யும்போது தமிழ் வாழ்க என்று சொல்லாமல் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என்றார். நாம் தமிழ் வாழ்க என்று சொல்ல போய், அது பாஜகவினருக்கு கடுப்பை ஏற்றிவிடப் போகிறதோ என்று நினைத்து இப்படி சொன்னாரா என தெரியவில்லை.
கைகுலுக்கினார்
பதவியேற்றுவிட்டு ரவீந்திரநாத் சீட்டில் உட்கார வந்து கொண்டிருந்தார். அப்போது, தயாநிதி மாறன் டக்கென எழுந்து ரவீந்திரநாத்துக்கு கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். இதை கொஞ்சமும் எதிர்பாராத ரவீந்திரநாத்தும் பதிலுக்கு கை கொடுத்து வணக்கம் சொன்னார். இருவரும் அப்போது பரஸ்பரம் சினேகத்துடன் சிரித்து கொண்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்
இது வெறும் சடங்கோ, சம்பிரதாயமாகவோ தெரியவில்லை. மாற்று கட்சியை சேர்ந்தவர் அதாவது எதிர்க்கட்சி உறுப்பினர்தானே என்றுகூட தயாநிதி மாறன் நினைக்கவில்லை, தாம் ஒரு பாராளுமன்ற சீனியர் என்ற நினைப்பும் அந்தசமயம் அவருக்கு எழவில்லை.
அரசியல் நாகரீகம்
எல்லோரும் தமிழ் வாழ்க என்ற சொல்லியும் உஷாராக ஜெய்ஹிந்த் சொல்லிவிட்டு வருகிறாரே என்ற வருத்தமும் தயாநிதிக்கு எழவில்லை. சக அவை உறுப்பினர், நம் மாநிலத்தை சேர்ந்தவர் என்ற எண்ணமே மேலோங்கியது. அரசியல் நாகரீகம் இன்னும் மக்கி போகவில்லை என்பதை தயாநிதி மூலம் திரும்பவும் நிரூபணமாகி உள்ளது.