எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு கூட்டத்தை கூட்டாத எடப்பாடி- லோக்சபாவில் கனிமொழி புகார்
டெல்லி: மாநில அளவில் பட்டியல் இனத்தோர், பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறைகளைத் தடுக்கும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் கூட்டவில்லை என்று லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி புகார் தெரிவித்தார்.
லோக்சபாவில் ஒரு கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா அளித்த பதிலை ஒட்டி துணைக் கேள்வி எழுப்பி கனிமொழி எம்.பி. பேசியதாவது:
பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறைகளை தடுப்பதற்காக மாநில அளவில் முதல்வர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு பல மாநிலங்களில் கூட்டப்படவில்லை என்பது வேதனையாகவும் வெட்க கரமாகவும் இருக்கிறது. அதிலும் தமிழ்நாடு சமூக நீதிக்கான பெருமை மிக்க மாநிலம். அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதல்வர் இந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை இதுவரை ஒரு முறை கூட கூட்டவில்லை என்பது வெட்கக் கேடானது.
(தயாநிதி மாறன் உட்பட பல உறுப்பினர்கள் ஷேம் ஷேம் என்று குரல் எழுப்பினர்). மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து நான்கு முறை அறிவுறுத்தப்பட்டும் கூட முதல்வர் அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மாநில முதல்வர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு?
இவ்வாறு கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா அளித்த பதிலில், மாண்புமிகு உறுப்பினர் கனிமொழி குறிப்பிட்டதுபோல, மாநில முதல்வர்கள் அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் கூட்டப்படவில்லை. ஆனால் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அடுத்து வரும் காலங்களில் மாவட்ட அளவுக்குக் கீழே உள்ள நிலைகளிலும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தற்போதுள்ள சட்டத்தில் இரண்டு முறை சீர்திருத்தங்களைச் செய்த பெருமை இந்த அரசுக்கு உண்டு. இந்த சட்டத்தை மேலும் வலிமையாக்கி தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களைச் செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது என்றார்.