மீனாக்ஷி லேகி தலைமையிலான முக்கிய நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக கனிமொழி எம்பிக்கு இடம்
டெல்லி: பாஜக எம்பி மீனாக்ஷி லேகி தலைமையிலான பொதுத்துறை நிறுவனங்கள் மீதான நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பட்டியலில திமுக எம்பி கனிமொழி பெயறும் இடம் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் புதிய அரசு அமைந்த பின்னர் பல்வேறு நிலைக்குழுக்களுக்கு புதிய எம்பிக்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக பல்வேறு நிலைக்குழுக்களில் பெரும்பாலான கட்சி எம்பிக்களும், மாநில வாரியான பிரதிநிதித்துவத்துடன் நியமிக்கப்படுவார்கள்.
அதன்படி இப்போதும் புதிதாக மோடி அரசு பதவியேற்ற பின்னர் பல்வேறு குழுக்களுக்கு உறுப்பினர்கள், சபாநாயகர் ஓம்பிர்லாவின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதில் பெரும்பாலான குழுக்களின் தலைவர் பொறுப்பில் பாஜகவைச் சேர்ந்த எம்பிக்களே நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் பாஜக எம்பி மீனாக்ஷி லேகி தலைமையிலான பொதுத்துறை நிறுவனங்கள் மீதான நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவைச் சேர்ந்த 22 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு பட்டியலில் தமிழத்தைச் சேர்ந்த திமுக எம்பி கனிமொழியும் இடம் பெற்றுள்ளார். இந்த குழுவின் பதவிக்காலம் என்பது ஜூலை 24 தொடங்கி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் 30 வரை இருக்கும். இந்த குழுதான் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் வரவு செலவு கணக்குகள் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும்.