மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு கனிமொழி எம்பி கடும் எதிர்ப்பு.. லோக்சபாவில் பரபரப்பு வாதம்
Recommended Video
டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகனச் (திருத்த) சட்ட மசோதா 2019 க்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா மாநிலங்களின் உரிமையில் தலையிடும் வகையில் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
விபத்துக்களை தடுக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 2019 மோட்டார் வாகன (திருத்த) சட்டத்தில் விதிமுறைகள் பல மிக கடுமையாக இருக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு தற்போது உள்ள அபராதத்தை விட பன்மடங்கு அதிக அபராதம் விதிக்க வகை செய்கிறது.
ஹெல்மெட் போடாவிட்டால்
குறிப்பாக காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வசூலிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஹெல்மெட் அணியாவிட்டால். ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் 100ல் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும். 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இனிமேல் 2000 ரூபாய்க்கு பதில் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வேகமாக வாகனத்தை ஓட்டுதல், ரேஸில்ஈடுபடுதல் போன்ற விதிமீறல்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இப்படி பல விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து துறையில் தனியாரை ஊக்குவிக்கும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபாவில் விவாதம்
லோக்சபாவில் இந்த மசோதாவை மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்ட மசோதா மீது இன்று விவாதம் நடந்தது.
மாநிலங்களின் உரிமையில்
அப்போது திமுக எம்பி கனிமொழி விவாதத்தில் பேசுகையில், "இந்த மசோதா மாநிலங்களின் உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது. வாகன ஓட்டுனர்களுக்கு கல்வித் தகுதி கட்டாயமில்லை என்ற விதி மீண்டும் கல்லாமையை ஊக்குவிக்கும். அந்த பிரிவை அரசு கண்டிப்பாக நீக்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த பல்வேறு திருத்தங்கள் புதிய சட்டத்தில் இடம்பெறவில்லை.
கடைக்கோடி கிராமங்கள்
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம், லாப நோக்கம் இல்லாமல் கடைக்கோடி கிராமங்கள் வரை பேருந்து சேவை அளித்து வருகிறது ஆனால் புதிய மசோதாவின் படி,போக்குவரத்துத் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தால் அவை லாபத்தை மட்டுமே பார்க்கும்" இவ்வாறு கூறினார்.