உளவுத்துறையினர் என்னை மிரட்டினர்... திமுக எம்பி கதிர் ஆனந்த் லோக் சபாவில் புகார்!!
டெல்லி: உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக திமுக எம்பி கதிர் ஆனந்த் இன்று லோக் சபாவில் தெரிவித்தார். இவருக்கு ஆதரவாக திமுக எம்பிக்களும் குரல் எழுப்பினர்.
இவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனாவார். வேலூர் லோக் சபா எம்பியாக முதன் முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் சென்றுள்ளார்.
ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு
மசோதாக்கள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. அவை துவங்குவதற்கு முன்பே முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதன்படி, தினமும் கூச்சல், குழப்பத்துடன் முக்கிய மசோதாக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஓம்பிர்லா
இன்று லோக்சபா சபா துவங்கியபோது திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் கூறினார். புகாரில், ''நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் எனக்கு மிரட்டல் விடுத்தனர். உளவுத்துறையினர் என்று என்னிடம் தெரிவித்தனர்.
உறுப்பினர்
இன்று லோக் சபாவில் நான் கேட்க இருக்கும் கேள்விகள் என்னென்ன என்று கேட்டு அறிந்து கொள்ள முயன்றனர். ஒரு லோக் சபா உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அத்துமீறல்
இதையடுத்து, இவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். காங்கிரஸ் கட்சியினரும் போலீசார் அத்துமீறி நடப்பதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து, புகார்களை எழுத்துப்பூர்வமாக பாதிக்கப்பட்டவர்கள் எழுதி கொடுக்கலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.