மத்திய அரசு உடனே செய்யணும்... ராஜ்யசபாவில் வால்பாறை தொழிலாளர்களுக்காக உருகிய திமுக எம்பி
டெல்லி: வால்பாறையில் போதிய அளவு ஏடிஎம்கள் இல்லாததால், சுமார் 50 ஆயிரம் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்படுவதாக ராஜ்யசபாவில் திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் கவலை தெரிவித்தார்.
இன்று ராஜ்யசபா கூடிய உடன் பூஜ்ஜிய நேரத்தில் திமுக மாநிலங்களவை எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தனது கேள்வியை எழுப்பலாம் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய திமுக எம்பி இளங்கோவன், வால்பாறை குறித்து பேசினார். "கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியத்தையும் எஸ்டேட் முதலாளிகள் வங்கி கணக்கில் செலுத்துகிறார்கள். ஆனால் அங்கு மொத்தமே 3 ஏடிஎம்கள் தான் உள்ளது.
அவர்களால் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுக்க முடியாது. அப்படி பணம் எடுத்தால் அவர்கள் தங்களது அன்றைய நாளுக்கான ஊதியத்தை இழக்க வேண்டி உள்ளது. ஏனெனில் அங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்களும் ஏடிஎம்களில் பணம் எடுக்கிறார்கள். இதன்காரணமாக பணத்திற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
அங்கு மக்களுக்கு மாதம் கிடைக்கும் ஊதியமே 8 ஆயிரம் தான். அதை எடுக்க போனால் அன்றைக்கு ஊதியத்தை இழக்க வேண்டியநிலையில் வால்பாறை மக்கள் உள்ளார்கள். எனவே அரசு அங்கு ஏடிஎம்களை அதிகப்படுத்த வேண்டும். அல்லது அதே வேளையில் 15 ஆயிரத்துக்கு கீழ் வழங்கப்படும் ஊதியங்களை நேரடியாக கைகளில் கொடுக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். வால்பாறையில் வெறும் 8 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் சென்று எடுக்க மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு ஊதியத்தை கையிலேயே கொடுக்க உத்தரவிட வேண்டும்" என்றார்.