பெகாசஸ்.. இந்திய ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளது.. நாடாளுமன்ற வளாகத்தில் டி.ஆர்.பாலு ஆவேசம்
டெல்லி: இஸ்ரேல் நாட்டின், பெகாசஸ் உளவு சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு இந்தியாவில் பல முக்கிய பிரமுகர்கள் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக உலகளாவிய அளவில் 17 ஊடகங்கள் நடத்திய விசாரணை முடிவில் தெரிய வந்தது. அது வரிசையாக செய்திகளாக வெளியாகி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மீது புகார் எழுந்துள்ள நிலையில் அந்த நாட்டு அரசு விசாரணை நடத்தி யார் உளவு பார்க்கப்பட்டார்கள், யாரால் உளவு பார்க்கப்பட்டார்கள் என்ற விவரத்தை பொது வெளிக்குக் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது.
மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்
அதேநேரம், இந்தியாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, 2 மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், பல்வேறு மூத்த பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், இதுவரை மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிடவில்லை .
ஓரணியில் எதிர்க்கட்சிகள்
மேலும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் முன்வரவில்லை. எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து இந்த விஷயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அமளி செய்தாலும் கூட இதுவரை மத்திய அரசு அதற்கு முன் வரவில்லை. இந்த நிலையில்தான் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று , காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
டி.ஆர்.பாலு பேட்டி
முதலில் ராகுல் காந்தி பேசிய நிலையில் அவருக்கு அடுத்தாற்போல திமுக சீனியர் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி ஆர் பாலு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதை எதிர்க்கட்சிகளாகிய, நாங்கள் எதிர்ப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை மத்திய அரசு மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. ஆனால் உண்மை அது கிடையாது.
விவாதம் நடத்தவில்லை
நாடாளுமன்றம் ஆரம்பித்த முதல் நாள் முதலே வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. கடந்த ஆறு முதல் ஏழு நாட்களாக நாங்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறோம். தினந்தோறும் ஏதாவது ஒரு வடிவத்தில் இதை விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அது ஒத்திவைப்பு தீர்மானமாக இருக்கலாம், கவனயீர்ப்பு தீர்மானமாக இருக்கலாம். ஆனால் இத்தனை கோரிக்கைகள் விடுத்த போதிலும் விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை.
ஜனநாயகத்திற்கு ஆபத்து
சபாநாயகர் அல்லது மத்திய அரசு விவாதம் நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. வேவு பார்த்தது ரொம்பவே முக்கியமான விஷயம் . ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அரசியல்வாதிகள் மட்டும் கிடையாது, நீதித்துறை, பத்திரிக்கை துறை என அனைத்து துறையில் இருப்பவர்களும் உளவு பார்க்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இந்த விஷயம் மிகவும் தீவிரமாக எடுக்கப்பட வேண்டியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஓரணியில் திரண்டு இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு டி ஆர்.பாலு தெரிவித்தார்.