நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு - நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, சிவா வலியுறுத்தல்
Recommended Video
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என லோக்சபாவில் திமுகவின் டி.ஆர். பாலு, ராஜ்யசபாவில் திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் வலியுறுத்தினர்.
ராஜ்யசபாவில் இன்று பேசிய திருச்சி சிவா, தமிழக மாணவர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த தீர்மானம் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. மாநில அரசின் தீர்மானத்தை கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. அதை உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
நீட் -தேவை விலக்கு
தமிழக மாணவர் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பிற்பகலில் லோக்சபாவில் இது தொடர்பாக டி.ஆர். பாலு பேசியதாவது:
மாணவர்கள் தற்கொலை
நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்தின் கீழ் நீட் தேர்வு கேள்வி கேட்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவகாரம்
இங்கிலாந்தில் கூட மருத்துவபடிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆகையால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும். கடந்த 5 ஆண்டுகாலத்தில் மத்திய பாஜக அரசு எந்த வேலைவாய்ப்பையுமே உருவாக்கவில்லை.
டெல்டா விவசாயிகள்
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற உறுதிமொழி என்னவாயிற்று? தமிழகத்துக்கான காவிரி நீர் திறக்கப்படாததால் டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.
நதிநீர் இணைப்பு
மேலும் ராஜ்யசபாவில் நாடு முழுவதும் அதிகரித்திருக்கும் குடிநீர் பற்றாக்குறை குறித்து பல்வேறு மாநில எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும் எனவும் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
திரிணாமுல் காங். போராட்டம்
ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவது தொடர்பாக திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார். இன்று காலை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அமித்ஷாவின் முதல் மசோதா
லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமது முதலாவது சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 10 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை அவர் தாக்கல் செய்தார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.