நீட் ரத்து, மகளிருக்கு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு-ராஜ்யசபாவில் திமுக எம்.பிக்கள் தனிநபர் மசோதா தாக்கல்
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை ராஜ்யசபாவில் திமுக எம்.பி. வில்சன் இன்று தாக்கல் செய்தார். இதேபோல் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தனிநபர் மசோதாவை திமுகவின் திருச்சி சிவா எம்.பி.தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் தனிநபர் மசோதாக்களைத் தாக்கல் செய்ய முடியும். முன்னர் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த வைகோ, இந்தியாவின் பெயரை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என மாற்றக் கோரி தனிநபர் மசோதா கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
புரிஞ்சுக்குங்க.. மோசமான விளைவை ஏற்படுத்தும்.. நதிநீர் உரிமையும் பறிபோகும்.. டிடிவி தினகரன் கண்டனம்
திருநங்கைகளுக்கான மசோதா
கடந்த 2015-ம் ஆண்டு ராஜ்யசபாவில் திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க வகை செய்யும் தனிநபர் மசோதாவை திமுக எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்தார். இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் திருநங்கைகளுக்கு தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க வழிவகை செய்தது அந்த மசோதா. திருச்சி சிவா எம்.பி.யின் இந்த முயற்சி பெரும் பாராட்டைப் பெற்றது.
நீட் ரத்து செய்ய கோரும் மசோதா
இதேபோல் இன்றும் ராஜ்யசபாவில் திமுக எம்.பி.க்கள் தனிநபர் மசோதாக்களைத் தாக்கல் செய்தனர். திமுக எம்.பி. வில்சன், மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒரு தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். மேலும் உச்சநீதிமன்ற கிளைகளை மாநிலங்களில் அமைப்பது தொடர்பாகவும் மற்றொரு தனிநபர் மசோதாவையும் வில்சன் எம்.பி. தாக்கல் செய்தார்.
|
வில்சன் எம்.பி.ட்வீட்
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், நீதியை எளிதாக சாதாரண மக்கள் கூட அணுகுவதற்கு ஏதுவாக மண்டல அளவில் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை நிறுவ வேண்டும் என்பதற்கான என்னுடைய போராட்டம் தொடர்கிறது.டெல்லி, சென்னை,மும்பை &கொல்கத்தாஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அமைக்க மீண்டும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினேன் என பதிவிட்டுள்ளார் வில்சன் எம்.பி.
பெண்களுக்கு இடஒதுக்கீடு கோரும் மசோதா
திருச்சி சிவா எம்.பி.யும் பெண்கள் தொடர்பான மிக முக்கியமான ஒரு தனிநபர் மசோதாவை இன்று தாக்கல் செய்தார். அதாவது வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்கான தனிநபர் மசோதாவை திருச்சி சிவா தாக்கல் செய்திருக்கிறார். திமுக எம்.பி.க்களின் இந்த மசோதாக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வும் தமிழக அரசும்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக அரசு, சட்டசபையில் நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். பல்வேறு அரசியல் கட்சியினரும் நீட் தேர்வு தொடர்பான தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக எம்.பி. வில்சன் தற்போது தனிநபர் மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்திருக்கிறார்.
விசிக ரவிக்குமார்
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் லோக்சபாவில் 3 தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் தாங்களே ஒரு தரப்பாக இருந்து வழக்கு தொடுப்பதற்கு ஏதுவாக உள்ள நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தைத் திருத்தம் செய்வதற்கான மசோதா; காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஊறு நேர்ந்தால் காவல் நிலைய அதிகாரியே பொறுப்பு என்னும் சட்டத் திருத்தத்துக்கான மசோதா ; விசாரணைக் கைதிகளுக்கும், 2 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெற்ற கைதிகளுக்கும் வாக்குரிமையை மறுக்காதிருக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரும் மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்தார் ரவிக்குமார் எம்.பி.
ஆகிய மசோதாக்களை இன்று அறிமுகம் செய்தேன்.