'நீட்' தேர்வு. . நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செய்த தரமான சம்பவம்.. பெருகும் உறுப்பினர்கள் ஆதரவு?
டெல்லி: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 'நீட்' (NEET) என்னும் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதில் இருந்து தமிழ்நாடு இந்த தேர்வுக்கு விலக்கு கோரி வருகிறது.
சமூகத்தின் எல்லா மக்களுக்கும் 'நீட்' தேர்வு சமவாய்ப்பு வழங்கவில்லை என்பதை தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. முழுக்க முழுக்க வசதியானவர்களுக்கு மட்டுமாகவே நீட் தேர்வு உள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
நிச்சயம் நடைபெறும்..நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை.. சுகாதார துறை இணை அமைச்சர் திட்டவட்டம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
கிராமப்புற மற்றும் ஏழைகளின் மருத்துவக் கனவை சிதைப்பதாக நீட் அமைந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்து வருகிறது. கடந்த ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வும் சரி, தற்போது இருக்கும் தி.மு.க.வும் சரி நீட் தேர்வுக்கு எதிராக குரல்களை பதிவு செய்து வருகின்றன. தற்போது இருக்கும் தி.மு.க அரசு தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
மு.க.ஸ்டாலின் அழுத்தம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும் டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார். இது தவிர தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.
எம்.பி.க்கள் எதிர்ப்பு
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கு ஏதிராக தி.மு.க எம்.பி.க்களும், அதன் கூட்டணி கட்சி எம்.பி.களும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும், உச்சநீதிமன்றத்தில் கிளை அமர்வுகளை அமைக்க கோரியும் தி.மு.க எம்.பி வில்சன் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
அனுமதி வழங்கப்படுகிறது
எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு புதிய சட்டம் கொண்டு வருவதற்கான தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்யலாம். இதன் மூலம் எந்த ஒரு பிரச்சினை குறித்தும், புதிய சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ கொண்டு வருவதற்கான மசோதாக்களை தாக்கல் செய்ய எம்.பி.களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இரண்டு மசோதா
இந்த அதிகாரத்தை பயன்படுத்திதான் தி.மு.க எம்.பி வில்சன் மாநிலங்களவையில் இரண்டு முக்கியமான தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளார். இதில் ஒன்று நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு நீட் விலக்கு அளிக்க வகை கோரும் மசோதாவாகும். இதேபோல் உச்சநீதிமன்ற கிளைகளை உருவாக்கும் வகையிலான இரண்டாவது மசோதாவையும் அவர் கொண்டு வந்துள்ளார்.
உச்சநீதிமன்ற கிளை
உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை வரையறுக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து சென்னையில்
உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என்று தனிநபர் மசோதாவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இரண்டு தனிநபர் மசோதாக்களும் பல மாநிலங்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றன. எனவே இந்த மசோதாக்களுக்கு பலத்த ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.