மேகதாது அணை: தமிழகத்துக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டேன்... திமுக எம்.பிக்களிடம் மோடி உறுதி
டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கும் விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டேன் என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்பதில் கர்நாடகா உறுதியாக உள்ளது. அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.
நான்தான் அதிமுக.. கெத்து காட்ட தலைமைக் கழகம் வந்த ஓபிஎஸ்- திடீர் ஆலோசனை
எடியூரப்பா கோரிக்கை
அப்போது, மேகதாது அணையை கட்டுவதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தி இருந்தார். ஆனால் கர்நாடகாவின் இந்த முயற்சிக்கு தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு
இந்நிலையில் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை திமுக எம்.பிக்கள் இன்று பிரதமர் மோடியிடம் கொடுத்தனர்.
தமிழகத்துக்கு கெடுதல் இல்லை
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மேகதாது அணை தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியிடம் கொடுத்தோம். இதற்கு பதிலளித்த மோடி, உங்கள் தலைவர் ஸ்டாலினிடம் சொல்லுங்கள்.. தமிழகத்துக்கு கேடுதரும் எந்த செயலையும் செய்யமாட்டோம் என உறுதியளித்தார் என்றார்.
முதல்வர் ஏன் சந்திக்கவில்லை?
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவில்லை என்றும் டி.ஆர். பாலு குறிப்பிட்டார். டி.ஆர். பாலுவுடன் திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.