காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்!
டெல்லி: தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வலியுறுத்தி லோக்சபாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்திய போது திமுக எம்.பி.க்கள் பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர்..
17-வது லோக்சபாவின் முதலாவது கூட்டு கூட்டத் தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார். அவர் உரையாற்ற தொடங்கிய உடனேயே திமுக எம்.பிக்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.
காவிரியில் தமிழகத்துக்கான நீரை கர்நாடகா உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதை வலியுறுத்தும் பதாகைகளையும் திமுக எம்.பிக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
அப்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடும் திமுக எம்.பிக்களை பார்த்து அமருமாறு கூறினார். ஆனால் அதை நிராகரித்த திமுக எம்.பிக்கள் காவிரி நீரை திறக்க வலியுறுத்தி முழக்கமிட்டு கொண்டிருந்தனர்.
பாஜக எம்.பிக்களோ, பிரதமர் மோடியின் பெயரை ராம்நாத் கோவிந்த் உச்சரித்த போதும் மோடியின் நலத் திட்டங்களை விவரித்த போதும் மேஜையை தட்டி ஆரவாரம் எழுப்பினர். ராம்நாத் கோவிந்த் தமது உரையை நிறைவு செய்த உடன் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமர்ந்திருந்த முன்வரிசைக்கு சென்று கை குலுக்கினார்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த வயநாடு எம்.பி. ராகுல் காந்தியுடனும் ஜனாதிபதி ராம்நாத் கை குலுக்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ராகுலை கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சமாஜ்வாதி ராஜ்யசபா எம்.பி. அமர்சிங்குடனும் உரையாடிக் கொண்டிருந்தனர்.