தமிழகத்தில் உடனே இடைத் தேர்தலை நடத்துங்கள்... தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
தலைமை தேர்தல் ஆணையரை திமுக எம்பிக்கள் நேரில் சந்தித்துள்ளனர்.
Recommended Video
டெல்லி: திமுக எம்பிக்கள் அனைவரும் கனிமொழி தலைமையில் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை இன்று நேரில் சந்தித்து பேசி தமிழகத்தில் உடனடியாக இடைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நீண்ட காலமாகவே இடைத்தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டும் அங்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
மற்றொரு புறம் திருப்பரங்குன்றம், திருவாரூர் இந்த இரு தொகுதிகளும் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்ததால் காலி தொகுதி என அறிவிக்கப்பட்டு விட்டது. இங்கேயும் தேர்தல் நடத்த சொல்லி மதுரை கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
திருவாரூர்
இதில் திருவாரூருக்கு வேண்டுமானால் தேர்தலை நடத்தி கொள்ளுங்கள், திருப்பரங்குன்றம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்து விட்டது. ஆனால் ஏதேதோ காரணங்களை சொல்லி திருவாரூர் இடைத்தேர்தலும் நிறுத்தப்பட்டு விட்டது.
21 தொகுதிகள்
இதனிடையே முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் கைது விவகாரத்துக்கு பிறகு ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
நேரில் சந்திப்பு
ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே இப்போது உயிருடன் இல்லாத நிலையில், காலி தொகுதிகளின் எண்ணிக்கையில் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது தமிழக நலனுக்கு சரியில்லை என்று திமுக கருதுகிறது. அதனால் கனிமொழி தலைமையில் எல்லா திமுக எம்பிக்களும் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தனர்.
மனு தந்துள்ளனர்
அப்போது, வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்து அது சம்பந்தமான கோரிக்கை மனுவையும் கொடுத்துள்ளனர். அதில் தமிழகத்தில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு உடனடியாக இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.