ஏகலைவன்களாக இனியும் இருக்கமாட்டோம்... லோக்சபாவில் பாஜகவுக்கு ஆ. ராசா எச்சரிக்கை
டெல்லி: மத்திய பாஜக அரசு துரோணர்கள் மனநிலையில் இருந்து மாற வேண்டும்; நாங்கள் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கும் ஏகலைவன்களாக இனியும் இருக்க முடியாது என திமுக எம்.பி. ஆ. ராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லோக்சபாவில் கல்லூரி ஆசிரியர் நியமன சட்ட திருத்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற்றது. இந்த மசோதா ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தாலும் முற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது.
இதற்கு சமூக நீதி பேசுகிற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. லோக்சபாவில் திமுக, விடுதலை சிறுத்தைகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
லோக்சபாவில் திமுக எம்.பி. ஆராசா பேசுகையில், பொருளாதார ரீதியில் பின் தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கு கடன், கல்வி உதவித் தொகை வழங்கலாம். கல்வி கட்டணத்தையே நீங்கள் ரத்து செய்யலாம்.
அதற்காக தனி இடஒதுக்கீடு தருவது என்பது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைப்பதாகும். நீங்கள் இன்னமும் துரோணாச்சாரியார்களின் மனநிலையில் இருக்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் கட்டை விரலை கேட்டவுடன் அதை வெட்டி தரும் ஏகலைவன்களாக இனி நாங்கள் இருக்க முடியாது என்றார் .