காஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்!
ஜம்மு காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக திமுக நடத்த உள்ள போராட்டம் பாகிஸ்தான் வரை தற்போது வைரலாகி உள்ளது.
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக திமுக நடத்த உள்ள போராட்டம் பாகிஸ்தான் வரை தற்போது வைரலாகி உள்ளது.
கடந்த இரண்டு வாரம் முன் மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் மசோதா தாக்கல் செய்து அதை நிறைவேற்றியது. இது உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை திமுக தீவிரமாக எதிர்த்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் தற்போது திமுக இந்தியாவில் தனித்து தெரிய தொடங்கி உள்ளது.
போராட்டம்
டெல்லியில் திமுக எம்பிக்கள் எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். 22ம் தேதி நடக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்களையும் ஸ்டாலின் அழைத்துள்ளார். மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.
காஷ்மீர் மக்கள்
காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிராக அங்குள்ள மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். ஆனால் அந்த காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இந்தியாவில் யாருமே போராடவில்லை. அப்படி இருக்கும் போது, தற்போது காஷ்மீர் பிரச்சனையில் திமுக மட்டும் போராடி வருகிறது. காஷ்மீர் மக்களை இந்த செய்தி உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
என்ன நன்றி
இதற்காக காஷ்மீர் மக்கள் பலர் டிவிட்டரில் திமுகவிற்கும் அதன் காஷ்மீர் நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுபோக திமுகவின் போராட்டம் தற்போது பாகிஸ்தானிலும் வைரலாகி உள்ளது. காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக இந்தியாவிலேயே ஒரு முக்கிய கட்சி போராட்டம் செய்வது பாகிஸ்தான் மக்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது.
|
என்ன டிவிட்
இது தொடர்பாக பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அரசு ரேடியோ செய்துள்ள டிவிட்டில், இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியான திமுக, காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்துகிறது என்று கூறியுள்ளது.
ஸ்டாலின்
இதன் மூலம் இந்தியாவில் பாஜகவை தனியாக எதிர்க்கும் முக்கிய தலைவராக ஸ்டாலின் உருவெடுத்து இருக்கிறார். மாநில அரசியலில் மட்டும் முக்கிய தலைவராக இருந்த ஸ்டாலின் தற்போது தேசிய அளவில் மிக முக்கியமான நபராக, தலைவராக கவனிக்கப்பட்டு வருகிறார்.