பிராந்தியக் கட்சிகளிலேயே பெரிய பணக்கார கட்சி எது தெரியுமா..?
Recommended Video
டெல்லி: இந்தியாவில் உள்ள பிராந்தியக் கட்சிகளிலேயே பெரிய பணக்காரக் கட்சி எது தெரியுமா. திமுகதானாம். சொல்கிறது வருமான வரித்துறை தகவல்கள்.
பிராந்தியக் கட்சிகளிலேயே திமுகவுக்குத்தான் அதிக அளவில் நிதி குவிகிறதாம். 2019ம் ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் பிராந்தியக் கட்சிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி குவியத் தொடங்கியுள்ளது. இதிலும் திமுகவே முன்னணியில் உள்ளது.
2017-18 காலகட்டத்தில் திமுக ரூ. 35 கோடி நிதியை சேகரித்துள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2வது இடத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வருகிறது. இந்தக் கட்சி இதே காலகட்டத்தில் 27.7 கோடி நிதியைத் திரட்டியுள்ளது. தெலுங்கு தேசம் திரட்டிய தொகை ரூ. 19 கோடியாகும்.
தேர்தல் செலவு நெருங்குகிறது
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேசியக் கட்சிகளை விட பிராந்திய கட்சிகளை படு வேகமாக நிதி திரட்டி வருகின்றன. 35 கோடி நிதியைத் திரட்டிய திமுக அதற்குள் 27 கோடியை செலவிட்டு விட்டதாகவும் வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016-17 காலகட்டத்தில் திமுக செலவிட்ட தொகை ரூ. 85 கோடியாகும்.
பட்நாயக்கின் படு வேக வளர்ச்சி
நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் படு வேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதாவது 14 கோடியை சேகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-17ல் இக்கட்சிக்கு வெறும் ரூ. 1.88 கோடி நிதிதான் கிடைத்தது.
பணக் குவியலில் தெலுங்கானா
தெலுங்கானா மாநிலத்தில்தான் பெருமளவில் தற்போது கட்சிகளிடேயே பணப் புழக்கம் வெகுவாக இருக்கிறதாம். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அந்த மாநிலத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் இதுவரை ரூ. 50 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மொத்தமாக 70 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தெலுங்கனாவின் பணப் பறிமுதல் பங்கு70% ஆகும்.
ஜெகன் மோகன் கட்சிக்கு ரூ. 14 கோடி
ஜெகன் மோகன் ரெட்டியின் யுவஜனா ஸ்ரிமிக ரைத்து காங்கிரஸ் கட்சி ரூ. 14 கோடி வரை வசூலித்துள்ளது. அதேசமயம் இக்கட்சியின் செலவுக் கணக்கு ரூ. 16 கோடியாகும்.
அதிமுகவிடம் எவ்வளவு
அதிமுகவின் நிதி வசூல் குறித்த விவரம் தெரியவில்லை. அந்தக் கட்சி இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு எந்தத் தகவலும் அளிக்கவில்லையாம். எனவே அது வந்தால்தான் தெரிய வரும்.