தொழில் செய்யுங்கள், சம்பாதியுங்கள்... ஆனால் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்.. அமைச்சர் எச்சரிக்கை
டெல்லி: சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி போலி செய்திகள் பரப்பப்பட்டால், அந்நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ரு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. விவசாய சட்டங்கள் தொடர்பாகப் போலி செய்திகளைப் பரப்பியதாக சுமார் 1300க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அந்த ட்விட்டர் கணக்குகளை தற்காலிகமாக மட்டுமே சில நாட்களுக்கு ட்விட்டர் நிறுவனம் முடக்கியிருந்தது. பின் மீண்டும் செயல்பட அனுமதித்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை நோட்டீசையும் அனுப்பியது.
கட்டுப்பட வேண்டும்
இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், லிங்டின் போன்ற சமூக வலைத்தளங்குள்கு இந்தியாவில் கோடிக் கணக்கில் பயனாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து தொழில் நடத்தலாம், பணத்தை சம்பாதிக்கலாம், ஆனால், நிச்சயம் நீங்கள் இந்தியா அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
சமூக வலைத்தளங்களை இந்திய அரசு மதிக்கிறது. சாதாரண மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் அதிகாரம் அளித்துள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டத்திலும் சமூக வலைத்தளங்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இருப்பினும், போலி செய்திகளைப் பரப்புவதற்கு சமூக வலைத்தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மத்திய அரசு vs ட்விட்டர்
விவசாய சட்டங்கள் குறித்து தவறான செய்திகளைப் பரப்பியதாக சுமார் 1300 ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவு இந்திய அரசியலமைப்பிற்கு எதிராகவுள்ளதாகக் கூறி, நடவடிக்கை எடுக்க ட்விட்டர் நிறுவனம் மறுத்துவிட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.
குற்றச்சாட்டு
அதைத்தொடர்ந்து இந்தியாவில் மட்டும் செயல்படாத வகையில் சில ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது. இருப்பினும், ட்விட்டர் நிறுவனம் இந்தியச் சட்டங்களை முறையாகப் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. இன்னும் சில நாட்களில் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.