கொரோனாவை இறுதியாக உறுதிப்படுத்த சி.டி. ஸ்கேன் எடுங்கள்.. நோயாளிகளை அறிவுறுத்தும் மருத்துவர்கள்!
டெல்லி: ஆன்டிஜென் சோதனை (RAT) மற்றும் ஆர்.டி.-பி.சி.ஆர்( RT-PCR ) சோதனையில் கொரோனா நெகட்டிவ் என உறுதிபடுத்தபட்டவர்களுக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை முறையில் கொரோனா இல்லை என தெரியவந்தாலும் இறுதியான முடிவை அறிய நோயாளிகள் சி.டி.ஸ்கேன் பரிசோதனையை அவசியம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது அசுர பலத்தை காட்டி வருகிறது. கடந்த சில வாரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்த கொரோனா தற்போது தினசரி பாதிப்பில் 2,50,000-க்கும் மேல் சென்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்... சமாதானம் செய்த மனைவி..!
ஊரடங்கை கையில் எடுத்த மாநிலங்கள்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு என்னும் ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன. மகாராஷ்டிராவில் 15 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு மாநிலங்கள் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்பதை அமல்படுத்திவிட்டன. ஆனால் பொது மக்கள் மாஸ்க் உள்ளிட்ட வழிமுறைகளை மறந்ததே கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் இதனை முழுமையாக பின்பற்றாவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனை
ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய விரைவான ஆன்டிஜென் சோதனை (RAT) மற்றும் ஆர்.டி.-பி.சி.ஆர்( RT-PCR ) சோதனை செய்யப்படுகிறது. குறைவான நேரத்தில், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ரேபிட் டெஸ்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பல குளறுபடிகள், தவறான முடிவுகள் பெறப்பட்டதால் இதனை நிறுத்தும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியது.
ஆர்.டி.-பி.சி.ஆரரில் நெகட்டிவ்; சி.டி.ஸ்கேனில் பாஸிட்டிவ்
ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் சளி மாதிரிகளைச் சேகரித்து கொரோனா பரிசோதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆன்டிஜென் சோதனை (RAT) மற்றும் ஆர்.டி.-பி.சி.ஆர்( RT-PCR ) சோதனையில் கொரோனா நெகட்டிவ் என உறுதிபடுத்தபட்டவர்களுக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கொரோனா நெகட்டிவ் என உறுதியானவர்களின் நெஞ்சகப் பகுதியில் சி.டி.ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் ரிப்போர்ட்டில் நுரையீரலில் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இதுபோன்று ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் நெகட்டிவ் என தெரியவந்து சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் பாஸிட்டிவ் என தெரியவரும் நோயாளிகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காரணம் என்ன?
''ஆர்டி-பி.சி.ஆரில் கொரோனா நெகட்டிவ் பரிசோதித்த நோயாளிகள் கதிரியக்க சோதனையின் மூலம் பாஸிடிவ் என தெரியவந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது சிடி ஸ்கேனில் ஒரு நோயாளியின் மதிப்பெண் 25 இல் 10 வரை ஆகும். இதன் பொருள் அவரது நுரையீரல் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது என்பதாகும் "என்று வதோதரா தனியார் மருத்துவமனைகளின் சங்கத்தின் தலைவர் டாக்டர் கிருதேஷ் ஷா கூறியுள்ளார்.
சி.டி.ஸ்கேன் பரிசோதனை அவசியம்
கொரோனா வைரஸ் நோயின் தீவிரத்தை அறிவதற்கு, நுரையீரல் பாதிப்பின் அளவை அறிந்துகொள்ள சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை முறையில் கொரோனா இல்லை என தெரியவந்தாலும் இறுதியான முடிவை அறிய நோயாளிகள் சி.டி.ஸ்கேன் பரிசோதனையை அவசியம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.