சர்வதேச கேன்சர் தினம்.. புற்றுநோய் குறித்த "இந்த" வதந்திகளை நம்பாதீங்க! மருத்துவர்கள் விளக்கம்
மூலிகை மருந்துகள் மூலம் இந்நோயை குணப்படுத்த முடியுமா? கீமோதெரப்பி வலி மிகுந்ததா? புற்றுநோய் பரவுமா? போன்ற சந்தேகங்களை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
டெல்லி: இன்று சர்வதேச புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் புற்றுநோய் காரணமாக ஆண்டுக்கு சுமாராக 1 கோடி பேர் வரை பலியாகின்றனர். இந்நிலையில் புற்றுநோய் குறித்த சில தவறான வதந்திகளை மருத்துவர்கள் விளக்கி கூறியுள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த அனுபவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கும். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு புற்றுநோய் குறித்த முழுமையான புரிதல்கள் இருப்பதில்லை. இது இந்நோய் குறித்த அச்சத்தையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாரபட்சமான அணுகுமுறையையும் உருவாக்குகிறது. எனவே இந்நோய் குறித்த தவறான புரிதல்களை உடைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
அந்த வகையில் மருத்துவர்கள் இது குறித்து சில தகவல்களை விளக்கியுள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது, "குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் இருக்கும் இடத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் புற்றுநோய் பரவும் என்கிற எண்ணம்தான். புற்று நோய் பரவும் தன்மை கொண்டது கிடையாது. இதனை ஒருவர் மற்றொருவருக்கு பரப்ப முடியாது.
கீமோதெரப்பி வலி மிகுந்ததா?
நம்முடைய ரத்தத்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பே நாம் புற்றுநோய் என்று கூறுகிறோம். புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மூலம் கட்டியை அகற்றுவதால் நோய் மேலும் பரவலாம் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் இதுவும் ஒரு வதந்திதான். அதேபோல நாம் அனைவரும் மிக நிச்சயமாக உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் மற்றொரு விஷயம் கீமோதெரபி வலி மிகுந்தது என்பதுதான். கீமோதெரபி என்பது நரம்பு வழியாக மருந்துகளை உட்செலுத்துதல் என்று சொல்லலாம். நாம் சாதாரணமாக வாய் வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் நரம்புகள் வழியாக உடலுக்குள் செலுத்தப்படுகிறது அவ்வளவுதான்.
புற்றுநோய் வந்துவிட்டால் மரணம் நிச்சமா?
இது வலி மிகுந்தது என்று சொல்வது அபத்தமானது. இந்த சிகிச்சை முறையால் பல பக்க விளைவுகள் வேண்டுமானால் ஏற்படலாம். முடி உதிர்தல், அஜீரணம், வயிற்றுப்போக்கு, நகங்கள் கருமை நிறமாக மாறுதல், குமட்டல், வாந்தி போன்றவை இந்த சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகளாகும். அதேபோல புற்றுநோய் வந்துவிட்டாலே மரணம் நிச்சயம் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்த கருத்தை தவறு என்று நிரூபித்துள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்நோய் எப்போதும் முனைப்பாகவே இருக்காது.
புற்றுநோய் மீண்டும் வருமா?
அதேபோல, புற்றுநோயின் வகையை பொறுத்து உயிரிழப்பு விகிதம் கணிசமாக மாறுபடுகிறது. மட்டுமல்லாது புற்றுநோயை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் சிகிச்சையை தொடங்கிவிட வேண்டியதுதான். எனவே நோய்க்கான அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம். இந்த வதந்திகள் விவகாரத்தில் இன்னொரு முக்கியமான வதந்தி, புற்றுநோய் மீண்டும் மீண்டும் வரும் என்பதுான். ஆரம்பக்கால புற்றுநோய்களை நம்மால் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். அதேபோல புற்றுநோய்கள் பல்வேறு வகைகள் இருப்பதால் நம்முடைய உணவு பழக்கம், வாழும் சூழல் போன்றவை காரணமா இவற்றில் வேறு ஏதேனும் ஒரு புற்றுநோய் மீண்டும் வருவதற்கான வாய்புகள் இருக்கிறது.
மூலிகை மருந்துகள் புற்றுநோயை குணப்படுத்துமா?
அதேபோல மூலிகை மருந்துகளால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று மக்கள் பரவலாக நம்புகின்றனர். ஆனால், இதுவரை அப்படி எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. சித்த மருத்துவம், யோகா, தியானமுறை போன்றவை புற்றுநோய் சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளை சரி செய்ய பயன்படுகிறது. எனவே புற்று நோய் குறித்து விழிப்புடன் இருப்போம். முடிந்த வரையில் வரும்முன் காப்போம்" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.