பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதாக பகீர் புகார்
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் இதனால் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி தார்யாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சந்திரசேகர ஆசாத்தின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர் ஹர்ஜித்சிங் பட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், கடந்த ஓராண்டாக சந்திரசேகர ஆசாத் உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் புதிய ரத்தம் வாரம் இருமுறை செலுத்தப்பட்டு வந்தது.
தற்போது சந்திரசேகர ஆசாத் சிறையில் இருப்பதால் இந்த சிகிச்சையை தொடர முடியவில்லை. இந்நிலை நீடித்தால் அவரது உடலில் உள்ள ரத்தம் உறைந்து அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
உலக அரசியலை புரட்டிப்போட்ட அந்த ஓர் அதிகாலை.. ஈரான் அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை? போர் வருகிறதா?
ஆகையால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சந்திரசேகர ஆசாத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதும் மனித உரிமை மீறல்தான் எனவும் மருத்துவர் ஹர்ஜித் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் சந்திரசேகர ஆசாத்தை விடுதலை செய்யக் கோரி பீம் ஆர்மி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.