கொரோனாவுக்கு மாட்டு சாணத்தை உடலில் பூசிக்கொள்ளும் மக்கள்..புதுநோய்கள் பரவும்..மருத்துவர்கள் வார்னிங்
டெல்லி: மாடுகளின் சாணம் ஒருவரை கொரோனாவில் இருந்து காக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவை புதிய நோய்களைப் பரப்பும் ஆபத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் சுமார் இதுவரை 2.26 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல நாட்டில் இதுவரை 2.46 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.சி.யூவில் கணவர்.. அருகில் இருந்த மனைவிக்கு.. பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்.. இது பீகார் கொடுமை!
இருப்பினும், உண்மையாக கொரோனா பாதிப்பு என்பது பதிவு செய்யப்படுவதைவிட 5 முதல் 10 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மாட்டின் சாணமும் கோமியமும்
அதேபோல மூடநம்பிக்கை காரணமாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத சில முறைகளையும் கொரோனா சிகிச்சைக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். குஜராத் மாநிலத்தில் சிலர் பசுவின் சாணமும் கோமியமும் தங்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்றும் தங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்றும் நம்புகின்றனர். இதனால் அவர்கள் வாரம் ஒரு முறை அங்குள்ள கோசாலைகளுக்குச் சென்று பசுவின் சாணம் மற்றும் கோமியத்தை தங்கள் உடல்களில் பூசிக்கொள்கின்றனர்.
மருத்துவர்கள் கூட
அது காய்ந்ததும், பால் அல்லது மோரைக் கொண்டு அவர்கள் தங்கள் உடலை சுத்தம் செய்து கொள்கின்றனர். அங்கிருக்கும் மாடுகளைக் கட்டியணைத்து தங்கள் பாசத்தையும் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது என்பது அவர்கள் நம்பிக்கை. இதைச் சாதாரண மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் சிலரும்கூட பின்பற்றுவதாக அங்குள்ள கோசாலை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சான்று இல்லை
இருப்பினும், மூட நம்பிக்கை காரணமாக இது போன்ற அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத சிகிச்சை முறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இது குறித்து இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஜெ.ஏ.ஜெயலால் கூறுகையில், கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை மாட்டுச் சாணமும் அதன் கோமியமும் அதிகரிக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.
புதிய நோய்கள் பரவும் அபாயம்
மக்கள் தங்கள் நம்பிக்கையைக் காரணமாக இப்படிச் செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் உடலில் பூசிக்கொள்வதால் உடல்நல கோளாறுகளும் ஏற்படும் அபாயம் உள்ளன. மேலும், இதன் காரணமாக விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் மற்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
மற்ற நோய்கள் பரவ வாய்ப்பு
உலகை தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசும் விலங்குகளிடம் (வௌவால்களில்) இருந்தே மனிதர்களுக்குப் பரவியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கோசாலைகளில் ஒரே இடத்தில் பலர் ஒன்றுகூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.