தோனியை நெருக்குகிறதா பாஜக.. அம்ரபலி முறைகேடு வழக்கு மூலம் லாக் செய்ய திட்டம்.. என்ன காரணம்?
அம்ரபலி நிறுவன முறைகேடு வழக்கு மூலம் கிரிக்கெட் வீரர் தோனிக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
டெல்லி: அம்ரபலி நிறுவன முறைகேடு வழக்கு மூலம் கிரிக்கெட் வீரர் தோனிக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அம்ரபலி நிறுவன முறைகேடு தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. அம்ரபலி குரூப்ஸ் நிறுவனம் தற்போது ரியல் எஸ்டேட் மோசடியில் சிக்கி இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு 10 வருடமாக வீடு கட்டிக்கொடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த புகாரில் சில நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பெயரும் அடிபட்டு வருகிறது.
தோனி மட்டுமல்ல சிஎஸ்கேவிற்கும் தொடர்பு உள்ளதா? அம்ரபலி முறைகேட்டில் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!
என்ன புகார்
அம்ரபலி நிறுவனம் மூலம் முறைகேடாக தோனிக்கு நெருக்கமான அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு பணம் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தோனியின் மனைவி சாக்ஷிதான் இயக்குனர். இதனால் இந்த முறைகேட்டில் தோனிக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
அடுத்து என்ன
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அடைந்த பின் தோனி என்ன செய்வார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. தோனி ராணுவத்திற்கு செல்வார் என்றும், தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக முயற்சி செய்வார் என்றும் கூட தகவல்கள் வருகிறது. இந்த நிலையில் தோனி பெரும்பாலும் அரசியலில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
பாஜக அழைப்பு
தோனிக்கு ஏற்கனவே பாஜகவினர் சார்பாக அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. எங்கள் கட்சியில் தோனி சேர்ந்தால் அவரை சேர்த்துக்கொள்வோம் என்று பாஜக சார்பாக சில எம்பிக்கள், முக்கிய உறுப்பினர்கள் அவருக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். ஆனால் இதற்கு தோனி தரப்பில் இருந்து இதுவரை எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை.
லாக்
இந்த நிலையில்தான் தற்போது அம்பரலி மோசடி புகார்கள் தோனி பக்கமாக திரும்பி இருக்கிறது. இவ்வளவு நாள் அமைதியாக இருந்த இந்த வழக்கு தோனியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. இதற்கு பின் பாஜக இருக்கிறதா? என்று சிலர் இணையத்தில் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள். தோனியை கட்சிக்குள் இழுக்க பாஜக இந்த அஸ்திரத்தை எடுத்துள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளது.
கம்பீர்
ஏற்கனவே கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் சேர்ந்த போது இதேபோல் சர்ச்சைகள் எழுந்தது. அவர் மீது அப்போதே ரியல் எஸ்டேட் மோசடி வழக்குகள் இருந்தது. ஆனால் அவர் பாஜக எம்பி ஆன பின் அந்த புகார் மீதான விசாரணைகள் அப்படியே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தோனிக்கு பாஜக அதேபோல் தூண்டில் போடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.