சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்பட பல விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து.. பயணிகள் கடும் அவதி
டெல்லி: சென்னை, டெல்லி, மும்பை, திருச்சி, தூத்துக்குடி, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்படும் வரும் சில விமானங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சில மாநிலங்களில் அதிகமாக உள்ள காரணத்தால் முன்னறிவிப்பு இன்றி பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து செல்லும் சுமார் 80 விமானங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இன்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதேபோல் பெங்களூரு- ஹைதராபாத் விமானமும் ரத்து செய்யப்பட்டது.
அதிகரிக்கும் கொரோனா... 117 மருத்துவமனைகளில் 2000 பெட்கள் ரெடி... டெல்லி அரசின் அதிரடி திட்டம்
போர்டிங் பாஸ் ஸ்கேன்
"விமான நிலைய நுழைவாயிலில் எங்கள் போர்டிங் பாஸ்கள் ஸ்கேன் செய்யப்பட்டபோதுதான் போர்டிங் ரத்து செய்யப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இப்போது என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை." என்று பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர்.மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் மற்றொரு பயணி, டெல்லிக்கு தான் ஏர் இந்தியா விமானம் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.
லக்னோ விமானங்கள்
திங்கள்கிழமை காலை 9 மணி வரை, 5 விமானங்கள் பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன, அதே நேரத்தில் 17 விமானங்கள் புறப்பட்டு 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லக்னோவிலிருந்து முதல் விமானம் திங்கள்கிழமை காலை அகமதாபாத்திற்கு புறப்பட்டது. பெங்களூரிலிருந்து ராஞ்சிக்கு மற்றொரு விமானம் அதிகாலை 5.15 மணிக்கு 173 பயணிகள் மற்றும் 3 குழந்தைகளுடன் புறப்பட்டது.
மேற்கு வங்கத்தில் ஆட்சேபம்
வெவ்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை மற்றும் விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் ஆட்சேபனை எழுப்பின. விமானங்களை இயக்குவதா என்பது குறித்து விமானம் மீண்டும் தொடங்கும் விஷயத்தில் நேற்று இரவு வரை குழப்பம் தொடர்ந்தது.
மே.வங்கத்தில் 28ம் தேதி
மும்பையில் இருந்து மீண்டும் விமானங்களைத் தொடங்க மகாராஷ்டிரா ஞாயிற்றுக்கிழமை இரவு ஒப்புக்கொண்டது, மகாராஷ்டிராவை மிகக் கடுமையாக தாக்கியுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் 25 விமானங்களையும், மும்பையில் இருந்து பறக்க அம்மாநில அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஆம்பன் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவால் மேற்கு வங்கம், மே 28 முதல் விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக தெரிவித்துள்ளது.
எப்படி இருந்தது விமான பயணம்
முக கவசங்கள் மற்றும் முகமூடிகளை அணிந்த பணியாளர்கள் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களிலும் பயணிகளை நுழைவு வாயில்களில் சோதனை செய்தார்கள். விமான பயணிகள் அனைவரும் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். டெல்லி-புவனேஸ்வர் விமானத்தில் பயணித்தவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசங்களை அணிந்திருந்தனர்.
சென்னை விமானங்கள்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு நடுவில் விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்த தமிழக அரசு, சென்னை மற்றும் கோவை, மதுரை உள்பட பிற மூன்று நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் விமானங்களை இயக்க அனுமதித்துள்ளது. பயணிகளுக்கு 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துல் கட்டாயம் என்றும், ஆன்லைனில் இ-பாஸ் கட்டாயம் வாங்க வேண்டும் என்று தமிழகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு விமானம்
இதனிடையே இன்று காலை 10.15 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கான ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் இன்று இரவு 9.15மணிக்கு திருச்சியிலிருந்து பெங்களூருக்கு புறப்படும் விமானம் இயக்கப்படுமா என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
திடீரென சென்னை விமானம் ரத்து
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கான விமான முன்பதிவு தொடங்கி இருந்தது. இதற்காக 38 பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்தனர்.. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று காலை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் அதிக அளவு கொரோனா உறுதியான அச்சத்தினால் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.