நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது
டெல்லி: கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் இன்று காலை முதல் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நாட்டின் விமான போக்குவரத்து சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதேபோல் இதர பொது போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன.
அண்மையில் வெளிநாடுகளில் லாக்டவுன்களால் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின.
2 மாதங்களுக்குப் பின்னர் விமான சேவைகள் தொடங்குவதால் கடந்த சில நாட்களாக அனைத்து விமான நிலையங்களும் முழு வீச்சில் தூய்மைப்படுத்தப்பட்டன. அனைத்து விமான நிலையங்களிலும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு?
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் இருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து அதிகாலையில் அந்தமானுக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.
சென்னையில் இருந்து மதுரைக்கு காலையில் புறப்படும் விமானம் சுமார் 8.20 மணிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சென்னையில் இருந்து கோவைக்கும் விமானம் இயக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் இருந்து 25 விமானங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Delhi: Passengers at Indira Gandhi International (IGI) Airport, Terminal-3 as domestic flight operations resume from today (25th May 2020). pic.twitter.com/dR9v8Rv0Ws
— ANI (@ANI) May 24, 2020
ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் இருந்து விமான சேவைகள் இயக்கப்படவில்லை. இதனிடையே விமான சேவைகள் தொடர்பாக மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 15 விமானங்கள் ரத்து
இதனிடையே சென்னையில் இருந்து புறப்படும் 15 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. போதுமான பயணிகள் இல்லாத காரணத்தால் இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.