டான் ரவி பூஜாரி கைது.. செனகல் நாட்டில் அதிரடி ஆக்ஷன்
Recommended Video
டெல்லி: பிரபல தாதா ரவி பூஜாரி செனகல் நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் தாதா சோட்டா ராஜனின் சிஷ்யர் ஆவார்.
மும்பையிலிருந்து செயல்பட்டு வந்தவர்கள் சோட்டா ராஜனும், ரவி பூஜாரியும். சோட்டா ராஜன்தான், ரவியை வளர்த்து ஆளாக்கியவர். இணைந்து செயல்பட்டு வந்த இவர்கள் இருவரும் 2001ல் பிரிந்து செயல்பட ஆரம்பித்தனர்.
பின்னர் ரவி எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. அவர் ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாக ஒரு தகவல் இருந்தது. அவரைக் கைது செய்ய இன்டர்போல் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சோட்டா ராஜன் சோட்டா ராஜன் பல மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில் தற்போது ரவி பூஜாரி செனகல் நாட்டில் கைதாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரை விரைவில் நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் சிபிஐ குழு செனகல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவி பூஜாரி கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள பாடுபித்ரி என்ற ஊரைச் சேர்ந்தவர். ஆங்கிலம், கன்னடத்தில் சரளமாக பேசக் கூடியவர். கடந்த ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித், மாணவர் தலைவர் ஷீலா ரஷீத், தலித் தலைவரும் குஜராத் இளைஞர் நாயகனுமான ஜிக்னேஷ் மேவானி ஆகியோருக்கு இவரது பெயரில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.
ரவி பூஜாரி சிக்கியிருப்பது இந்திய காவல்துறைக்கு பெருத்த நிம்மதியைக் கொடுத்துள்ளது.