நாங்களா அனுபவம் இல்லாதவர்கள்... நாங்கள் ஒரு சர்வதேச நிறுவனம்... சீறும் பாரத் பயோடெக்
டெல்லி: தங்களை அனுபவம் இல்லாதவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது சரியான விமர்சனம் இல்லை என்றும் தாங்கள் ஒரு சர்வதேச நிறுவனம் என்றும் பாரத் பயோடெக் தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளது,
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு நேற்று அனுமதியளித்தது. நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்குப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மூன்றாம்கட்ட தடுப்பூசி சோதனைக்கு முன்னரே அனுபவம் இல்லாத பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், தங்கள் மீதான விமர்சனங்களுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டாக்டர் கிருஷ்ணா எலா பதிலடி கொடுத்துள்ளார்.
தங்கள் மீதான விமர்சனத்திற்குப் பதிலளித்துள்ள அவர், "எங்கள் நிறுவனத்தின் மருத்துவ பரிசோதனைகள் 12 நாடுகளில் வெற்றிகரமாக நடைபெறுகிறது. இதுவே எங்கள் அனுபவத்திற்குச் சான்று.
கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது அரசியலாக்கப்படுகிறது.. பாரத் பயோடெக் இயக்குநர் வேதனை
எங்களுக்கு அனுபவம் இல்லை என்று குற்றஞ்சாட்டாதீர்கள். நாங்கள் ஒரு சர்வதேச நிறுவனம். இதுவரை 16 தடுப்பூசிகளைத் தயாரித்த அனுபவம் உடையவர்கள் நாங்கள். எனவே எங்களை விமர்சிக்காதீர்கள்" என்றார்.
மேலும், மருத்துவ சோதனைகளின் தரவுகளில் பாரச் பயோடெக் வெளிப்படைத்தன்மையைக் காட்டவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு என்றும் அவர் தெரிவித்தார்.
12 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசியைச் சோதனை முறையில் அளிக்கவும் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து சேமித்து வைத்துக்கொள்ளவும் மத்திய அரசு நேற்று அனுமதி அளித்திருந்தது.