'நீங்கள் சொல்வதை நம்ப தயாராக இல்லை..' பஞ்சாப் & மே.வங்க அரசை.. வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையான சிறார்கள் குறித்து மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் அரசுகள் சமர்ப்பித்த தரவுகள் நம்பும்படி இல்லை எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதில் அப்டேட் செய்யப்பட்ட தரவுகளைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கொரோனா 2ஆம் அலை பாதிப்பு மே மாதம் வரை நீடித்தது. அப்போது நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
ஒருபுறம் கொரோனா பாதிப்பு காரணமாகவும் மறுபுறம் சரியான நேரத்தில் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமலும் பலரும் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில்.. குறைகிறது தொற்று.. இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி பாக்கி.. விறுவிறு பணி
பெற்றோரை இழந்த குழந்தைகள்
கொரோனா 2ஆம் அலையால் நாடு முழுவதும் உள்ள பல நூறு குழந்தைகள் தாய்- தந்தையை இழந்து அனாதையாகியுள்ளார். இப்படி ஆதரவின்றி விடப்படும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு மாநில அரசுகளும் பல திட்டங்களை அறிவித்துள்ளன. இதற்காகப் பால் ஸ்வராஜ் ( Bal Swaraj) என்ற தளத்தை உருவாக்கியுள்ள மத்திய அரசு, கொரோனாவால் தாய் தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாகும் சிறார்கள் பற்றிய தகவல்களை இதில் பதிவு செய்யுமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியது.
உச்ச நீதிமன்றம்
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆதரவற்ற குழந்தைகள் குறித்து அப்டேட் செய்யப்பட்ட தரவுகளைப் பால் ஸ்வராஜ் தளத்தில் பதிவு செய்யாதது ஏன் என்று காஷ்மீர், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மேற்கு வங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்டேட் செய்யப்பட்ட தரவுகளே தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நம்பத் தயாராக இல்லை
இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், "ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் வெறும் 27 சிறார்கள் மட்டுமே ஆதரவற்றவர்களாக மாறினார்கள் என்று நீங்கள் கூறுகிறார்கள். இது உண்மை தானா? மற்ற மாநிலங்களின் தரவுகளைப் பார்த்தீர்களா இல்லையா? உங்கள் மாநிலத்தில் கொரோனா இல்லாத நிலை ஒன்றும் இருக்கவில்லை. இந்த தரவுகளை நம்ப நாங்கள் தயாராக இல்லை. இது குறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் எனப் புரியவில்லை" என்று விமர்சித்தார்.
குழந்தைகள் என்ன செய்வார்கள்
கொரோனாவால் அனாதையானவர்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மேற்கு வங்க வழக்கறிஞர் தெரிவித்தார். இதைக் கேட்டுக் கோபமடைந்த நீதிபதிகள், "இதுபோல பொறுப்பில்லாமல் பேசாதீர்கள். உங்கள் பணி பல ஆண்டுகள் ஆகும். அதுவரை குழந்தைகள் என்ன செய்வார்கள்?" என்று சாடினர். இதேபோல பஞ்சாப் அரசு சமர்ப்பித்துள்ள தரவுகளும் நம்பும்படி இல்லை எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், முறையான தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
பஞ்சாப் அரசு
மேலும், ஆதரவற்ற குழந்தைகள் குறித்த தரவுகளைச் சேகரித்தால் மட்டுமே வரும் காலங்களில் அவர்களுக்கு உதவ முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அப்போது பஞ்சாப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தில் 73 குழந்தைகள் மட்டுமே பெற்றோரை இழந்துள்ளதாகவும் அவர்களில் 33 பேர் கொரோனாவாலும், 40 பேர் கொரோனா இல்லாத காரணங்களினாலும் பெற்றோரை இழந்துள்ளனர் என்றார்.
உச்ச நீதிமன்றம்
இருப்பினும், இதைத் தரவுகள் நம்பும்படி இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், ஊர் வாரியாக இது குறித்த தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதேபோல அப்டேட் செய்யப்பட்ட தரவுகளைச் சமர்ப்பிக்குமாறு ஜம்மு காஷ்மீர் அரசையும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.