நம்பாதீங்க.. எக்ஸிட் போல் நோக்கமே வேற.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அதிரடி ஆடியோ மெசேஜ்
டெல்லி: எக்ஸிட் போல் முடிவுகள் நம்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான, பிரியங்கா காந்தி ஆடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல்களில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் என்று கூட, பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நல்லா கேட்டுக்கங்க.. 23ம் தேதி காலை எண்ண ஆரம்பிப்பாங்க.. நைட்டுக்கு மேல்தான் ரிசல்ட் தெரியும்!
ஆடியோ மெசேஜ்
இந்த நிலையில்தான், பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டு, சோர்ந்து போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தொண்டர்கள் சோர்ந்துவிட்டால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகளின்போது பாஜக முகவர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருப்பதால் இதுபோன்ற ஒரு ஆடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்று தெரிிகிறது.
நம்பாதீங்க
அந்த ஆடியோவில், பிரியங்கா காந்தி கூறியுள்ளதாவது: எனது, சகோதர சகோதரிகளே, நீங்கள் எக்ஸிட் போல் எனப்படும் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். இது உங்களது ஆர்வத்தை குறைப்பதற்காக வெளியிடப்பட்ட ஒரு கருத்து. நீங்கள் தொடர்ந்து உத்வேகத்தோடு, வாக்கு எண்ணிக்கை பணியை கண்காணிக்க வேண்டும்.
கண்காணிப்பு தேவை
வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் நீங்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். நமது கூட்டு முயற்சிக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மமதா எச்சரிக்கை
ஏற்கனவே, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி வெளியிட்ட ட்வீட்டில், இதுபோன்ற எக்ஸிட் போல் முடிவுகள் என்பது வாக்குப்பதிவு எந்திரங்களில், பாஜக முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு வசதியாக வெளியிடப்பட்ட சதி என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.