வேகமாக ஏடிஎம் விரைந்த லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள்.. பதற்றம் அடைய வேண்டாம்.. ஆர்பிஐ அறிவுரை!
டெல்லி: லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம், உங்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் moratorium கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 16ம் தேதி வரை மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.
வங்கியின் நிர்வாக குழுவின் நிலவிய பிரச்சனைகள், வாராகடன், மோசமான நிதி மேலாண்மை என்ற பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கிக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மோசம்
ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்த வங்கி செயல்பட்டு வந்தது. வங்கியில் நிலவி வரும் குளறுபடிகளை ஆர்பிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது வங்கியில் இருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை சேர்ந்த வங்கி என்பதால், இதில் தமிழர்கள் பலர் கணக்கு வைத்துள்ளனர்.
வேகம்
இதையடுத்து லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் வேகமாக பணம் எடுக்க ஏடிஎம் விரைந்துள்ளனர். 25 ஆயிரம்தான் எடுக்க முடியும். அதையாவது இப்போதே எடுத்து வைத்துக் கொள்வோம். கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் இன்னும் சிக்கலாகும் என்று வேகமாக ஏடிஎம் விரைந்துள்ளனர்.
அச்சம்
தாங்கள் சேர்த்து வைத்து இருந்த பணம் எங்கே வீணாகிவிடுமோ என்று பலர் அச்சம் அடைந்துள்ளனர். கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் இருக்கிற பணத்தையும் எடுக்க முடியாமல் போய்விடும் என்று இவர்கள் பதற்றம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று ஆர்பிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
அச்சம் வேண்டாம்
உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது. உங்களின் நலன் கருதியே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட வேண்டாம். இந்த கட்டுப்பாடுகள் வங்கி மற்றும் வாடிக்கையாளர் நலனுக்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது, என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பதால் லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.