காஷ்மீர் விவகாரத்தில் அவசரபட வேண்டாம்.. மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை!
காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் திடீர் என்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக அங்கு நடக்கும் மாற்றங்கள் போர் வருமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு புதிதாக 35000 வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் அமர்நாத் யாத்திரையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கனவே அங்கு யாத்திரை சென்று இருக்கும் பக்தர்களையும் வெளியேற அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனைக்கு பின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம். அதிகப்படியான பாதுகாப்புப்படை குவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமர்நாத் யாத்ரீகர்களை திரும்ப செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் கொள்கை அமைப்பு குழுவை கூட்டி விவாதம் செய்தோம். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அவசரம் காட்டுவது போல தெரிகிறது. அங்கு இருக்கும் பயணிகளை எல்லாம் வெளியேற சொல்லி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் மக்கள் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள், என்று காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.