எங்களுக்கு வேண்டியது அமைதி தான்.. ஆனால் எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்.. எச்சரிக்கும் ராணுவ தளபதி
டெல்லி: பேச்சுவார்த்தை மூலம் மோதல்களைத் தீர்க்க இந்தியா விரும்பினாலும், பொறுமையைச் சோதிக்கும் வகையிலான செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே எச்சரிக்கை விட்டுள்ளார்.
இன்று நாடு முழுவதும் 73ஆவது ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகளும் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது பேசிய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே, "பேச்சுவார்த்தைகள் மூலமும் அரசியல் நடவடிக்கைகள் மூலமே மோதல்களைத் தீர்க்க இந்தியா விரும்புகிறது. இருப்பினும், எங்கள் சோதிக்கும் தவறை யாரும் செய்யாதீர்கள்" என்றார்.
தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்துப் பேசிய அவர், "சீனாவுடன் நமக்கு மோதல் நிகழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அங்கு அமைதியை மீண்டும் நிலைநாட்டுவது தான் நமது நோக்கம் என்றாலும்கூட சீனாவுக்கு முதலில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. கல்வான் மோதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் பகுதியிலுள்ள நிலை குறித்துப் பேசிய அவர், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 300 முதல் 400 பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் எப்போதும் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தத் தயார் நிலையிலேயே உள்ளனர்" என்றார்.
இந்நிகழ்வில் 2020ஆம் ஆண்டில் தேசத்தைப் பாதுகாக்கும் பல்வேறு பணிகளில் உயிரிழந்த 100 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாரவனே, "சீனா தற்போது எல்லையில் வீரர்களைத் திரும்பப் பெறுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடையத் தேவையில்லை. அங்கு இருக்கும் நிலைமையை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேசத்தைப் பாதுகாக்க நமது வீரர்கள் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்" என்றார்.