தேசப்பற்று குறித்து எங்களுக்கே பாடம் எடுக்கிறீர்களா? பழைய வரலாற்றை புரட்டி பாருங்கள்.. திரிணமூல்
டெல்லி: பெங்காலிகளுக்கு தேசப்பற்றையும் தேசியவாதத்தையும் சொல்லி தர முயற்சிக்க வேண்டாம் என திரிணமூலம் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இதில் இந்து, கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே முஸ்லீம்கள் பட்டியலில் இடம்பெறாததால் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பொய்யான வாக்குறுதிகள்
இந்த நிலையில் இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் பேசுகையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பொன் எழுத்துகளில் எழுதப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நான் கூறுகிறேன், இந்த மசோதாவானது முகமது அலி ஜின்னாவின் கல்லறையின் மீது எழுதப்படும். பொய், ஏமாற்றுதல், பொய்யான வாக்குறுதிகள் ஆகிய மூன்றை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது பாஜக.
எரித்து விடுங்கள்
கடந்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். அதுகுறித்து கவலைக் கொள்ள தேவையில்லை என உள்துறை அமைச்சர் கூறுகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது "பணமதிப்பிழப்பு பிரச்சினையை சரி செய்ய எனக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுங்கள்.
இல்லாவிட்டால் என்னை உயிரோடு எரித்து விடுங்கள்" என பிரதமர் தெரிவித்திருந்தார்.
பாடம் நடத்த வேண்டாம்
ஆனால் இன்றோ பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து யாரும் பேசுவதில்லை. வாக்குறுதிகளை மீறுவதில் பாஜக அரசு சிறப்பாக இருக்கிறது. பெங்காலிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த முயற்சிக்க வேண்டாம்.
ஆவணங்கள்
உண்மையான பெங்காலி எப்படியிருக்க வேண்டும், தேசப்பற்று என்றால் என்ன என்பது குறித்து எங்களுக்கு சொல்லிக் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஆங்கிலேயர்களின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் குறித்த ஆவணங்களை சற்று புரட்டி பாருங்கள்.
ஜாக்கிரதை
அப்போதுதான் நாங்கள் எப்படிப்பட்ட தேசப்பற்றுள்ள பெங்காலிகள் என்பது தெரியவரும். எங்களுக்கு கற்று கொடுக்க நீங்கள் யார்? 84 ஆண்டுகளுக்கு முன்னர் நாசி ஜெர்மனி ஒரு சட்டத்தை இயற்றியது. அது போன்ற ஒரு சட்டத்தைத்தான் நாம் இன்று இந்த அவையில் இயற்ற முற்படுகிறோம். இதெல்லாம் சர்வாதிகாரிகளின் அறிகுறிகள் ஜாக்கிரதை என தெரிவித்தார்.