இந்தியாவுக்கு வருகை தரும் 7-வது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்
டெல்லி: நாடு விடுதலை அடைந்தது முதல் இந்தியாவுக்கு வருகை தரும் 7-வது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்கா அதிபராக இருந்த ஒபாமா, 2 முறை இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
Recommended Video
நாடு விடுதலை பின்னர் 1959-ல் நேரு பிரதமராக பதவி வகித்த காலத்தில் அப்போதைய அமெரிக்கா அதிபர் டுவைட் ஐசன்ஹோவன் இந்தியா வருகை தந்தார். அன்றைய சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் நிலவிய அக்காலகட்டத்தில் நமது நாடு அணிசேரா கொள்கையை கடைபிடித்தது. டுவைட்டின் இந்திய பயணம் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது.
1969-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமெரிக்கா அதிபரான ரிச்சர்ட் நிக்சன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால் 1971ல் வங்கதேச யுத்தத்தின் போது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததால் இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.
அவசரநிலை பிரகடனம் நீக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது 1978-ல் அமெரிக்கா அதிபர் ஜிம்மி கார்ட்டர் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது அணுசக்தி ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட வைக்க ஜிம்மி கார்ட்டர் முயன்றார். ஆனால் அதுநடைபெறவில்லை.
நெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 2000-ம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக வகித்த காலத்தில் அமெரிக்கா அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியாவுக்கு வருகை தந்தார். தாராளமயமாக்கல் உலகில் இந்தியாவும் நுழைந்த 10 ஆண்டுகளுக்குப் பிந்தைய அமெரிக்கா அதிபர் கிளிண்டனின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இப்பயணத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் ஆதரவு நிலையில் இருந்து அமெரிக்காவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது.
2006-ல் அமெரிக்கா அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் புஷ் இந்தியா வருகை தந்தார். இப்பயணத்தின் போது பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்தார்.
இதன்பின்னர் அமெரிக்கா- இந்தியா உறவில் புதிய திருப்பமாக 2010 மற்றும் 2015-ல் அமெரிக்கா அதிபராக பதவி வகித்த ஒபாமா இருமுறை இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். 2015-ல் நாட்டின் குடியரசு தின விழாவில் ஒபாமா, சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றார்.
தற்போது இந்தியாவுக்கு வருகை தரும் 7-வது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப். இப்பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் இருதரப்பு நல்லுறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.