அன்று அமெரிக்காவின் ஸ்டேடியத்திற்கு வந்த மோடி.. இன்று என்னை இங்கு வரவழைத்துள்ளார்.. டிரம்ப் புகழாரம்
அகமதாபாத்: 5 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் டெக்சாஸில் நடந்த மிகப் பெரிய ஃபுட்பால் ஸ்டேடியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தோம். ஆனால் இன்று அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு இந்தியா அமெரிக்காவை அழைத்துள்ளது என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
Recommended Video
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மோடேரா ஸ்டேடியத்திற்கு வருகை தந்தார்.
இங்கு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நமஸ்தே
இதைத் தொடர்ந்து அமெரிக்க டொனால்ட் டிரம்ப் தனது உரையை நமஸ்தே என கூறி தொடங்கினார். அவர் பேசுகையில் இந்தியாவுக்காக இரவு பகலாக எனது நண்பர் பிரதமர் மோடி உழைத்து வருகிறார். சிறப்பான வரவேற்பு அளித்த எனது நண்பர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். இந்தியாவுக்கு எப்போதும் உண்மையுடனும் இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக அமெரிக்கா விளங்கும். இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது; இந்தியா மீது அமெரிக்கா மதிப்பு கொள்கிறது.
விருந்தோம்பல்
5 மாதங்களுக்கு முன்னர் டெக்சாஸில் நடந்த மிகப் பெரிய ஃபுட்பால் ஸ்டேடியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தோம். ஆனால் இன்று அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு இந்தியா அமெரிக்காவை அழைத்துள்ளது. இந்த விருந்தோம்பல் எங்கள் நினைவில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.
நம்பிக்கை
டீ விற்பவராக தனது பணியை தொடங்கினார் பிரதமர் மோடி. இன்று அவரை அனைவரும் விரும்புகிறார்கள். பிரதமர் மோடி குஜராத்திற்கு மட்டும் பெருமிதம் அல்ல. கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் மோடி. மனித குலத்திற்கே நம்பிக்கையளிக்கிறது இந்தியா. இந்தியாவின் சிறந்த தலைவர் பிரதமர் மோடிக்கு எங்களது நன்றி.. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் மின்சார வசதியைப் பெற்றுள்ளது. மோடியின் தலைமையில் இந்தியா எந்த சாதனையையும் நிகழ்த்தும்.
தாயகம்
ஜனநாயகத்தின் ஒரு அற்புதமாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் இந்த ஒற்றுமை உலகிற்கே ஊக்கமளிக்கிறது. 70 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் குஜராத்தியர்களுக்கு எனது நன்றி. அமெரிக்காவில் வேலையின்மை குறைந்துள்ளது. உலகம் முழுவதும் வாழும் நடுத்தர வர்க்க மக்களின் தாயகமாக இந்தியா உருவெடுக்கும்.
இந்தியா
பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகிறது. பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இது வரை இல்லாத அளவுக்கு சிறந்த ஆயுதங்களை தயார் செய்கிறோம். நவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. தற்போது இந்தியாவுடன் இணைந்து மேலும் சிறப்பாக செயல்படுவோம்.
பாகிஸ்தான்
இரு நாடுகளும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அவர்களது சித்தாந்தங்களையும் வேரறுக்க ஒன்றிணைந்துள்ளன. பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளை ஒழிக்கும் முயற்சியை நான் அதிபராக பொறுப்பேற்ற நாள் முதல் பாகிஸ்தானுடன் இணைந்து எடுத்து வருகிறோம். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா வலியுறுத்தும்.
100 சதவீதம் அழிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகள் அமெரிக்க படைகளால் 100% அழிக்கப்பட்டுவிட்டது. ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டுவிட்டார். எங்களது தேசத்தின் எல்லைகள் தீவிரவாதிகளுக்கு எப்போதும் மூடப்பட்டதாகவே இருக்கும். இந்த பிராந்தியத்தில் நல்லுறவு நீடிக்க அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என கூறிய டிரம்ப் தனது உரையில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள்காட்டினார். டெண்டுல்கர், கோஹ்லி பெயரை குறிப்பிட்டும் டிரம்ப் உரையாற்றினார்.