அமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு தர ஒப்பந்தம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு
டெல்லி: அமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு தர ஒப்பந்தம் கையெழுத்தானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபரின் 2ஆவது நாளான இந்திய பயணம் இன்று இனிதே தொடங்கியது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்பிற்கும் மெலானியாவுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்திற்கு வருகை தந்த டிரம்ப்பை மோடி வரவேற்றார். அப்போது அவர் கூறுகையில் இந்திய மக்களால் எனக்கும் மெலானியாவுக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பை மறக்கமாட்டோம்.
வர்த்தகம்
மோடி மீது மக்கள் அளவுக்கடந்த அன்பு வைத்துள்ளனர். 1.25 லட்சம் பேர் ஸ்டேடியத்தில் இருந்தனர் என்றார். இதையடுத்து மோடியும் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப் கூறுகையில் இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு துறை தொடர்பாக ரூ 21 ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இன்றைய பேச்சுவார்த்தையில் வர்த்தகம் தொடர்பான விஷயங்களே அதிகம் இடம்பெற்றன.
ஒத்துழைப்பு
இரு நாட்டிற்கும் முக்கியமான சந்திப்பாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தது. 5ஜி வயர்லெஸ் நெட்வொக்கின் முக்கியத்துவம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் சுதந்திரம், முன்னேற்றம், செழிப்புக்கான ஒரு கருவியாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி விவாதித்தோம். இணையதள பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பயங்கரவாதம்
பாதுகாப்பு துறையில் செயல்படுவதற்கு மேலும் உத்வேகமாக அமைந்தது. நவீன அமெரிக்க ராணுவ தளவாடங்கள், அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்பு துறையில் இந்தியாவும் - அமெரிக்காவும் மேலும் வலுப்பெறும். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம்.
பெண்கள் முன்னேற்றம்
பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து இருவரும் நீண்ட விவாதம் நடத்தினோம். இரு நாடுகளும் இணைந்து சரித்திரம் படைக்க தயாராகிறோம். அமெரிக்காவில் பெண்கள் முன்னேற்றத்திற்கு பணியாற்றிய இவான்காவுக்கு நன்றி என்றார் டிரம்ப்.