டெல்லியில் வன்முறை குறித்து கேள்விப்பட்டேன்.. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.. டிரம்ப்
டெல்லி: டெல்லியில் வன்முறை நடந்தது குறித்து கேள்விப்பட்டேன். அது குறித்து நான் எதையும் மோடியிடம் ஆலோசிக்கவில்லை. அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவில் இன்று 2-ஆவது நாள் பயணமாக குடியுரசுத் தலைவர் மாளிகை வருகை, ராஜ்காட்டில் காந்திக்கு அஞ்சலி, தொழில் துறையினருடனான சந்திப்பு ஆகியவற்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் செய்தியாளர்களை டிரம்ப் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் மதச் சுதந்திரம் சிறப்பாக உள்ளதாக பிரதமர் மோடி என்னிடம் கூறினார்.
99 சதவீதம்
மத சுதந்திரத்திற்காக இந்தியா கடுமையாக பாடுபட்டு வருகிறது. மதசுதந்திரத்திற்காக மோடி ஆதரவாக உள்ளார். குடியுரிமை திருத்தத் சட்டம் குறித்து நான் பேசவில்லை. சிஏஏ குறித்து பேச விரும்பவில்லை. மக்களுக்கு அரசு நல்லதையே செய்திருக்கும் என நம்புகிறேன். எச் 1 பி விசா குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன். தலிபான்களுடன் விரைவில் உடன்பாடு எட்டப்பாடும். ஆப்கானிஸ்தானில் 99 சதவீதம் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.
அமெரிக்கர்கள்
டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் உள்நாட்டு பிரச்சினை ஆகும். வன்முறை குறித்து கேள்விப்பட்டேன், ஆனால் அதுகுறித்து பேசவில்லை. இது உள்நாட்டு விவகாரம். பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். உலகின் மிகப் பெரிய சந்தை இந்தியா. இங்கு அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
நெருடலான விஷயம்
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈராக் பயங்கரவாதி சுலைமானியை அமெரிக்க படைகள் கொன்றது. இந்தியா வலிமையான நாடு பயங்கவாதத்தை எதிக்கொள்ளும் வலிமை உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. இரு நாடுகள் இடையே நெருடலான விஷயமாக உள்ளது காஷ்மீர்.
மத்தியஸ்தம்
என்னால் முடிந்த அளவுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். பிரதமர் மோடியுடனும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுடனும் எனது உறவு நல்லவையாக உள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் செயலாற்றி வருகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு அதிக இறக்குமதி வரி விதித்திருப்பது குறித்து பேசினோம் என்றார் டொனால்ட் டிரம்ப்.