யமுனை ஆற்றிலே.. ஈரக் காற்றிலே.. தாஜ்மஹாலில் டிரம்ப்.. உதடுகளில் புன்னகை தவழ.. மெலனியா கை பற்றியபடி!
தாஜ்மஹாலை காதலுடன் டிரம்ப் தம்பதி ரசித்து பார்த்தனர்
டெல்லி: ஒருவர் கையை இன்னொருவர் இறுக்கமாக பற்றிகொண்டு.. காதலுடன் தாஜ்மஹாலை சுற்றி பார்த்து மெய் சிலிர்த்தனர் டிரம்ப் தம்பதிகள்!
டிரம்புக்கும் தாஜ்மஹாலுக்கும் ஏற்கனவே சில தொடர்புகள் உள்ளன! டிரம்பை பொறுத்தவரை நிறைய சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.. இவர் ஒரு தொழிலதிபர்.. எழுத்தாளர்.. அரசியல்வாதி.. இவருக்கென்று நிறைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அபார்ட்மெட்டுகள் என ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன.
இதை தவிர, டிரம்ப் டவர், டிரம்ப் பிளாசா, டிரம்ப் தாஜ்மஹால் என அமெரிக்காவில் இவரது பெயரில் சொத்துக்கள் நிறைய உண்டு! அந்த வகையில் நம்ம தாஜ்மஹாலை போலவே டிரம்புக்கும் சொந்தமாக ஒரு தாஜ்மஹால் இருந்ததாம்.
டிரம்ப் தாஜ்மஹால்
அட்லாண்டிக் நகரில் டிரம்ப் தாஜ்மஹால் என்று அதற்கு பெயர்.. அது ஒரு சூதாட்ட விடுதி... 1990ம் வருடம் இந்த பிரமாண்டமான விடுதியை கட்டினார்.. அது பார்ப்பதற்கு நம்முடைய தாஜ்மஹாலை போலவே இருக்கும்.. 30 ஆண்டுகாலம் பழமை என்றாலும், இந்த விடுதியில் 3 ஆயிரம் பேர் வேலை பாரத்து வந்தார்களாம்.. பிறகு இந்த விடுதி நிர்வாகம் மீது எழுந்த ஒரு குற்றச்சாட்டு காரணமாக 2016-ல் அந்த டிரம்ப் தாஜ்மஹால் மூடப்பட்டுவிட்டது.
தலைவர்கள்
இப்போது இந்தியாவுக்கு டிரம்ப் வரஉள்ளதாக தகவல் உறுதியான உடனேயே தாஜ்மஹாலை சந்திக்க ஆர்வம் கொண்டார்.. பொதுவாக வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் நம் தாஜ்மஹாலை சுற்றி பார்த்து புளகாங்கிதம் அடைந்துவிட்டுதான் போவார்கள்.. அந்த வகையில் டிரம்ப் தம்பதி சகிதமாக தாஜ்மஹாலுக்குள் சுற்றி பார்த்து மெய் சிலிர்த்தனர். அங்குள்ள வருகை பதிவு புத்தகத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
போட்டோக்கள்
இதையடுத்து தாஜ்மகால் முன்பு தனது மனைவியுடன் நின்று போட்டோவும் எடுத்துக்கொண்டார். தாஜ்மகாலின் சிறப்புகளை டிரம்ப் தம்பதிக்கு கைடு எனப்படும் வழிகாட்டி விளக்கினார்.. இந்த 3 வருடங்களில் அவர் இந்தியாவுக்கு வந்தது கிடையாது. ஆனால், அவருடைய மகள் இவாங்கா மட்டும், தொழில் முறை பயணமாக இந்தியா வந்து சென்றிருக்கிறார். இந்த நிலையில், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹாலை காதல் மனைவி மெலனியாவுடன் சுற்றி பார்த்து வியப்படைந்தார் டிரம்ப்.
காதல் ரசம்
இந்தப் பயணத்தின்போது டிரம்ப்புடன் கை கோர்க்காமல் அருகே மட்டும் நெருங்கி வந்து கொண்டிருந்த மெலனியா, தாஜ் மஹாலுக்குள் வந்ததுமே கைகளைப் பற்றிக் கொண்டார். மனைவியின் கையை இறுக்கமாக கோர்த்துக் கொண்டு சுற்றி வந்த டிரம்ப்பும் காதல் ரசம் சொட்டும் வகையில் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. காரணம் மெலனியாவின் இதழ்களில் அப்படி ஒரு புன்னகை வழிந்தோடியது.
நெகிழ்ந்தனர்
இவர்களை போலவே,மகள் இவாங்காவும், அவருடைய கணவரும் கட்டியணைத்தபடி தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்கள். அப்பாவும் அம்மாவும் ஒரு பக்கம், மகளும் மருமகனும் இன்னொரு பக்கம் என ஜோடி போட்டு பிரிந்து போய் தாஜ் மஹாலைப் பார்த்து நெகிழ்ந்தனர். இவர்கள் 4 பேரையும் பார்க்கும்போது, தாஜ்மஹாலுக்குள் நுழைந்தவுடன் தங்களையே மறந்தநிலையில் உள்ளது போல தெரிகிறது.. தாயும், மகளும் இருவருமே வெட்கப் புன்னகையுடன் வலம் வந்தனர். ஆனால் தங்கள் கணவன்மார்களின் கைகளை மட்டும் விடவேயில்லை.
காதல் சின்னம்
தாஜ்மஹாலின் எழில் கொஞ்சும் அழகில்... புன்னகை தவழ இந்த தம்பதிகள் காதலுடன் வலம் வருவதை நாட்டு மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்தனர். சும்மாவா சொன்னார்கள் தாஜ்மஹாலை காதல் சின்னம் என்று.. "மாறன் அம்புகள் தானாகவே பாயுமே" உள்ளே நுழைந்ததும்!