மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையுடன் அமெரிக்கர்கள் துணை நிற்போம்.. ராஜ்காட்டில் டிரம்ப்
டெல்லி: மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையுடன் அமெரிக்கர்கள் துணை நிற்போம் என காந்தி நினைவிடத்தில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எழுதியுள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபரின் 2ஆவது நாளான இந்திய பயணம் இன்று இனிதே தொடங்கியது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்பிற்கும் மெலானியாவுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அவரது மனைவி சவீதா கோவிந்தும் வரவேற்றனர். ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப்புக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பார்வையாளர்கள் புத்தகம்
பின்னர் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்றனர். அங்கு மலர்வளையம் வைத்தும் மலரஞ்சலியும் செலுத்தினர். இதைத் தொடர்ந்து இருவரும் அங்கிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் குறிப்பெழுதினர்.
மெலானியா
அந்த புத்தகத்தில் டிரம்ப் குறிப்பிடுகையில், இந்தியாவின் அற்புதம் மற்றும் இறையாண்மையுடன் அமெரிக்க மக்கள் துணை நிற்கிறார்கள். இதுதான் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வை. இது மிகப் பெரிய மரியாதை என டிரம்ப் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார். மெலானியாவும் கையெழுத்திட்டார்.
சபர்மதி ஆசிரமம்
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு காந்தியின் மார்பளவு சிலை பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் காந்தி சமாதி அருகே அரச மரக்கன்றுகளை டிரம்பும் மெலானியாவும் நட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நேற்றைய தினம் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற டிரம்ப் அங்கிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் குறிப்பெழுதினார்.
பட்டும்படாமல்
அதில் மகாத்மாவை பற்றி குறிப்பிடாமல் மோடி குறித்து எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே ராஜ்காட்டிலாவது காந்தி குறித்து எழுதுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் காந்தி குறித்து அவர் எழுதியது திருப்தி அளிக்கவில்லை. ஏதோ பட்டும் படாமல் எழுதியது போல் இருப்பதாகவே தெரிகிறது.