போராடும் விவசாயிகளுக்கு சரக்கு சப்ளை-ஹரியானா காங். பெண் நிர்வாகி பேச்சால் ராகேஷ் திகாயத் கொந்தளிப்பு
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மதுபானங்களையும் கொடுக்க வேண்டும் என ஹரியானா மாநில காங்கிரஸ் பெண் பிரமுகர் வித்யா தேவி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது.
டெல்லியில் சுமார் 3 மாதங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராடி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் தீவிரம் - நாடு முழுவதும் விவசாயிகள் சுற்றுப்பயணம்
விவசாயிகள் போராட்டம் நீடிப்பு
மத்திய அரசின் 3 புதிய விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை தங்களது போராட்டம் நீடிக்கும் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு பாஜக தவிர பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஹரியானா காங். நிர்வாகி பேச்சு
இப்போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஹரியானா காங்கிரஸ் பிரமுகர் வித்யா தேவி என்பவர் கட்சி தொண்டர்களிடையே பேசுகையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பணம், காய்கறிகள், மதுபானங்கள் என அனைத்தையும் வழங்க வேண்டும் என பேசியிருந்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் ஆனது.
|
பாஜக கடும் கண்டனம்
ஹரியான மாநில காங்கிரஸ் தலைவர்களும் வித்யா தேவியின் பேச்சால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது வித்யா தேவியின் சொந்த கருத்து என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வித்யா தேவியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏன் இப்படி? ராகேஷ் திகாயத்
டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் ராகேஷ் திகாயத், வித்யா தேவியின் இந்த பேச்சை கண்டித்துள்ளார். மேலும் இவர்கள் எல்லாம் இப்போராட்டத்துக்கு எந்த பங்களிப்பும் செய்யாதவர்கள். விவசாயிகள் போராட்டத்துக்கு மதுபானங்கள் எதற்கு? தேவையில்லாத பேச்சுகளை நிறுத்துங்கள் என காட்டமாக கூறியுள்ளார்.