இந்தியாவில் முதல்முறை... குழந்தைகளிடம் கொரோனா தடுப்பூசி சோதனை.. பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக 2 முதல் 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசியின் 2ஆவது மற்றும் 3ஆவது பரிசோதனைகளை மேற்கொள்ள மருந்துக் கட்டுப்பாட்டு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல் அலையைப் போல இல்லாமல் இரண்டாம் அலையின் பாதிப்பு மிக மோசமாகவே உள்ளது.
திமுகவுக்கு தாரை வார்க்கப்பட்ட 3 எம்பிக்கள்.. வைத்திலிங்கம், கேபி முனுசாமியின் ராஜினாமா பின்னணி!
குறிப்பாக இரண்டாம் அலையில் இளைஞர்கள், இணை நோய் இல்லாதவர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அதேபோல 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் மத்தியிலான வைரஸ் பாதிப்பும் அதிகரித்துள்ளது.
குழந்தைகளுக்குத் தடுப்பூசி
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் 18+ அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு எந்த நிறுவனத்தின் தடுப்பூசி சோதனைகளும் முடியவில்லை. இதனால் குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.
குழந்தைகளிடம் சோதனை
இந்நிலையில், இரண்டு முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனைகளை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாடு அமைப்பு இன்று அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசோதனைகளில் மொத்தம் 525 குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த பாரத் பயோடெக் திட்டமிட்டுள்ளது.
எந்த அடிப்படையில் அனுமதி
முன்னதாக, குழந்தைகளிடம் பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு மருத்துவ வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே தற்போது இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு 28 நாட்கள் இடைவெளியில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் அளிக்கப்படவுள்ளது. கடைசிக் கட்ட சோதனையைத் தொடங்கும் முன், 2ஆம் கட்ட சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி
இந்தியாவில் இந்தாண்டு தொடக்கத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், அப்போது கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம்கட்ட சோதனை முடிவுகள் வெளியிடப்படாததால், மக்களிடையே தொடக்கத்தில் அச்சம் இருந்தது. பின்னர், கோவாக்சின் தடுப்பூசி 78% பலன் அளிப்பது தெரியவந்தது. மேலும், பிரதமர் மோடியும் இதே தடுப்பூசியைத்தான் எடுத்துக் கொண்டார்.
கடும் தட்டுப்பாடு
இது மட்டுமின்றி பிரிட்டன் உள்ளிட்ட பல உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் கோவாக்சின் சிறப்பாகச் செயல்படுவது தெரிய வந்தது. இதனால் மக்களிடையே அச்சம் நீங்கி, கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளத் தொடங்கினர். ஆனால், தேவைக்கு ஏற்ற வகையில் உற்பத்தி அதிகரிக்கவில்லை. இதனால் பல மாநிலங்களிலும் கோவாக்சின் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.