விரைவில் அகதிகள் முகாம்.. பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு.. குடியுரிமை சட்டத்தின் ஷாக்கிங் பின்னணி!
குடியுரிமை சட்ட திருத்த மசோதா காரணமாக இந்தியாவில் பல லட்சம் இஸ்லாமியர்கள் அகதிகள் முகாமில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
Recommended Video
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா காரணமாக இந்தியாவில் பல லட்சம் இஸ்லாமியர்கள் அகதிகள் முகாமில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூலம் இன்று லோக்சபாவில் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா அறிமுகத்துக்கு 293 பேர் ஆதரவு அளித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த 82 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் புதிய அகதிகள் முகாம்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.
வங்கதேச அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை இந்திரா வழங்கியதும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? அமித்ஷா
என்ன முகாம்
கடந்த லோக்சபா தேர்தலின் போதே அமித் ஷா பிரச்சாரத்தின் போது அகதிகள் முகாம் குறித்து குறிப்பிட்டு இருந்தார். அப்போது அசாமில் என்ஆர்சி பட்டியல் வெளியாகி இருந்தது. அங்கு மொத்தம் 3,30,27,661 பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர். ஆனால் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் வெறும் 3,11,21,004 நபர்களின் பெயர்கள்தான் இடம்பெற்று இருந்தது. 19,06,657 நபர்களின் பெயர்கள் இதில் விடுபட்டு உள்ளது.
என்ன பேச்சு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித் ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பலர் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பினார்கள். நான் அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறிய ஒருவர் கூட இருக்க முடியாது.
முகாம்
இதனால் இவர்கள் எல்லாம் இந்தியாவில் விரைவில் கட்டப்படும் அகதிகள் முகாமில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது, என்று குறிப்பிட்டார். அதன்படி அசாம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும் அகதிகள் முகாம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
அடுத்த வாரம்
அடுத்த வாரம் எப்படியும் இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுவிடும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியாவில் ஆவணங்களின்றி குடியேறிய இஸ்லாமியர்கள் எல்லோரும் வெளியேற்றப்படுவார்கள். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே என்பதால் அவர்கள் எல்லோரும் கைது செய்யப்படுவார்கள்.
அகதிகள் முகாம்கள்
ஆனால் இப்படி இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு அனுப்பப்பட மாட்டார்கள். சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள். மாறாக இவர்களின் குடியுரிமை மறுக்கப்பட்டு, வாக்குரிமை மறுக்கப்பட்டு , இவர்கள் எல்லோரும் அகதிகள் முகாமில் அடைக்கப்படுவார்கள் .
எங்கு எல்லாம்
இதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய இந்தியா ஆகிய நான்கு பகுதிகளில் அகதிகள் முகாம் இப்படி அமைக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.