"கன்னியாகுமரி வரை வாரிசு அரசியல்.. இது அபாயம்" பாஜக வெற்றி விழாவில் மோடி பரபரப்பு பேச்சு
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றியை கொண்டாடுவதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வாரிசு அரசியலை கடுமையாக சாடியுள்ளார்.
அதிலும் குறிப்பாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, சில கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன என்று மோடி குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
11 மாநிலங்களில் 58 சட்டசபைத் தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியாகின.
நாட்டுக்காக உழைப்பதால் பாஜகவை மக்கள் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.. வெற்றி விழாவில் மோடி உற்சாக பேச்சு
பாஜக வெற்றி
பீகாரில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இடைத்தேர்தலில் பல பகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் இரும்புக் கோட்டைக்குள் புகுந்து கொடி நாட்டியது பாஜக.
இந்த நிலையில்தான் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று இரவு நடைபெற்றது வெற்றி விழாக் கூட்டம். திரளாக வந்து பங்கேற்றனர் தொண்டர்கள்.
தொண்டர்களிடையே உரை
தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி எழுச்சியுரை ஆற்றினார். அப்போது அவர், தொண்டர்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது பேச்சின்போது, காங்கிரஸ் மற்றும் வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார் நரேந்திரமோடி.
ஜனநாயகமே பலம்
மோடி கூறுகையில், இந்திய நாட்டின் பலம் ஜனநாயகம்தான். இந்திய இளைஞர்கள் இந்த பலம் என்ன என்பதை நன்கு உணர்ந்து வைத்துள்ளனர். ஆனால், நம்மை பின்னோக்கி தங்க வைப்பது குடும்பங்கள் நடத்தி வரும் அரசியல் கட்சிகள்தான். இது போல வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள், காஷ்மீரிலும் இருக்கின்றன. கன்னியாகுமரியிலும் இருக்கின்றன. நாடு முழுக்க அங்கங்கு பரவியுள்ளன. தங்களுக்கான திட்டங்களை தீட்டுகின்றன.
காங்கிரசுக்கு குட்டு
மாநில கட்சிகள் மட்டும் இப்படி இல்லை. ஒரு பெரிய தேசிய கட்சிகூட படிப்படியாக சுருங்கி, ஒரு குடும்பம் நடத்தும் கட்சியாக இப்போது மாறிவிட்டது. இதுதான் ஜனநாயகத்திற்கு உண்மையான அபாயம். வாரிசு அரசியலும், ஜனநாயகமும் கையோடு கை கோர்த்து ஒரு நாட்டில் பயணிக்க முடியாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது தெரிவித்தார்.
காஷ்மீர் வாரிசு அரசியல்
காஷ்மீரில் மெகபூபா முப்தி வாரிசு அரசியல் நடத்துவதாகவும், ஒரு குடும்பத்தின் கைகளில் காஷ்மீர் அரசியல் சிக்கி இருப்பதாகவும் பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பிரதமர் மோடியும் ஒரே குடும்பத்தின் கையில் காஷ்மீர் அரசியல் சிக்கியதாக கடந்த காலங்களில் விமர்சனம் செய்தார்.
கன்னியாகுமரி என்று சொன்னது ஏன்?
அதேநேரம் கன்னியாகுமரி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது திமுகவையா என்ற ஐயப்பாடுகளை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகிறார்கள். ஏனெனில் திமுகவை வாரிசு அரசியல் நடத்துவதாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாரிசு அரசியல் என்ற அஸ்திரத்தை, பீகார் தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக கையில் எடுத்துள்ளார் பிரதமர் மோடி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், பீகாரில் லாலு குடும்பம் வாரிசு அரசியல் நடத்துவதாக பிரதமர் கூறியிருக்கலாம் என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.