அதிகார துஷ்பிரயோகம் செய்தாரா? தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவை விசாரிக்க மத்திய அரசு திட்டம்!
டெல்லி: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா 2009-2013 காலங்களில் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாரா என்று மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
இந்தியாவில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவி வகிக்கிறார். அசோக் லவசா மற்றும் சுசில் சந்திரா ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக உள்ளனர். இதில் அசோக் லவசா அடுத்த தேர்தல் ஆணையராக வாய்ப்புள்ளது.
அசோக் லவசா 2013 இறுதியில் தேர்தல் ஆணையராக பதவி ஏற்கும் முன் 2008-2013 காலத்தில் மத்திய மின் அமைச்சகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். அந்த துறையில் இவர் சிறப்பு செயலாளர் மற்றும் கூடுதல் செயலாளர் பொறுப்புகளை வகித்து வந்தார்.
என்ன கேள்வி
இவர் அங்கு பணியில் இருந்த போது பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இந்த நிலையில் இவரின் பனிக்காலத்தில் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாரா என்று மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பாக 11 பொதுத்துறை நிறுவன அதிகாரிகளிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
விவரம்
ஆனால் இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. மத்திய அரசு ஏன் அசோக் லவசா குறித்து விசாரணை செய்கிறது என்றும் தகவல் வெளியாகவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதா என்றும் தகவல் வெளியாகவில்லை.
மறுத்துவிட்டார்
இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அசோக் லவசா மறுத்துவிட்டார். இந்த விசாரணை குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. அதனால் இதை பற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது என்று அசோக் லவசா தெரிவித்துவிட்டார்.
யார் இவர்
கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக வந்த விதிமீறல்கள் புகார்கள் வந்தது. அதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுத்தது. இரண்டு தேர்தல் ஆணையர்கள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். தேர்தல் ஆணையர் அசோக் லவசா மட்டும் மோடியின் விதிமீறல்களை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
ஆனால் இல்லை
இதனால் 2-1 என்ற கணக்கில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக வந்த விதிமீறல்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து அசோக் லவசா இந்தியா முழுக்க வைரலானார். அசோக் லவசாவின் மனைவிக்கு சில மாதங்கள் முன் வருமானவரித்துறை நோட்டிஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.